"கேஸ்" போடப் போகிறோம்.. சரத் அன் கோவுக்கு.. நாசர் அன் கோ எச்சரிக்கை!
சென்னை: இன்னும் கணக்கை ஒப்படைக்காத முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது சென்னை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என்று இன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நடந்த நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர் நாசர் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள்.
நாசர் தலைமையில் நடந்த இந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
ஒப்பந்தம் ரத்து ஏற்பு
நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகத்தின் போது, எஸ்.பி.ஐ. சினிமாவுக்கும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கும் இடையே போடப்பட்ட எல்லா வகை ஒப்பந்தங்களையும் ரத்து செய்யும் முடிவை நடிகர் சங்க செயற்குழு ஏகமனதாய் ஏற்றுக்கொள்கிறது.
கணக்கு காட்டாதவர்கள் மீது வழக்கு
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும், நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-14, 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு 3 மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்ப்பிக்காததால் சென்ற நிர்வாகத்தின் தலைவர் (சரத்குமார்), பொதுச்செயலாளர் (ராதாரவி), பொருளாளர் (வாகை சந்திரசேகர்) ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்படும்.
குருதட்சணைத் திட்டம்
குருதட்சணை திட்டம் என்கிற தலைப்பின் கீழ் உறுப்பினர்கள் பற்றிய கணக்கெடுப்பை சேகரிக்கும் திட்டத்தை வடிவமைத்த துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் உறுப்பினர்களை செயற்குழு பாராட்டுகிறது.
ஏ.ஆர்.ஓக்கள்
சங்கத்தின் துணை தலைவர் கருணாஸ் பொறுப்பில் ஏற்படுத்தப்பட்ட ஏ.ஆர்.ஓ.க்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நெறிப்படுத்த துணைக்குழு அமைக்கப்படும்.
கார்த்தி கணக்கு ஓ.கே!
சென்ற மாதத்துக்கான சங்கம், அறக்கட்டளை வரவு-செலவு கணக்குகள் பொருளாளர் கார்த்தியால் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினர்.
பேட்டி
அதன் பின்னர் நாசர் உள்ளிட்ட பலரும் கூடி செய்தியாளர்களுக்குப் பேட்டியும் அளித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள்:
இப்பத்தானே ரத்து செய்துள்ளோம்
கட்டட ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்திருக்கிறோம். இதற்காக ரூ.2.50 கோடியை எஸ்.பி.ஐ. சினிமாவுக்கு திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளோம். தற்போது புதிய கட்டடத்துக்கான 4, 5 வரைபடங்கள் வந்துள்ளன. அவை பரிசீலிக்கப்படும்.
விரைவில் போலீஸில் புகார்
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் கணக்கு களை ஒப்படைக்க 3 மாதம் காலக்கெடு கொடுத்தோம். ஆனாலும், இதுவரை முழுமையாக கணக்குகளை ஒப்படைக்கவில்லை. எனவே தான் இன்றைய செயற்குழு அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. திங்கள்கிழமை முதல் இதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விடும். இதையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் போலீசில் புகார் செய்வோம்.
நாடகம் போடப் போறோம்
நடிகர் சங்கக் கட்டத்திற்குத் தேவையான நிதியை வசூலிக்க, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியும், நடிகர்-நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து நாடகம் நடத்தியும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.
ராதிகா விளக்கம் செல்லாது செல்லாது
நடிகை ராதிகாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அவரும் பதில் அளித்துள்ளார். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை என்று அவர்கள் கூறினர்.