விரைவில் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் நளினி.. வழக்கறிஞர் பேட்டி
வேலூர்: தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார் நளினி. 5 நாட்களாக நடத்திய போராட்டத்தை அவர் வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து 10 நாட்களில் வேலூர் சிறைக்கு நளினி மாற்றப்பட உள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி. வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிக்கக் கோரி சிறையில் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

சென்னை புழல் சிறைக்கு மாற்றினால், மகளின் திருமண ஏற்பாட்டினை கவனிக்க வசதியாக இருக்கும் என அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரிக்கக் கோரி சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினியிடம் சிறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து நளினி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார். இதனையடுத்து நளினி மேற்கொண்ட 5 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்தது.
இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு விரைவில் நளினி மாற்றப்படுவார் என்றும் சிறை மாற்றம் கோரி நளினி அனுப்பிய மனுவை தமிழக அரசுக்கு சிறைத்துறை அனுப்பி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications