நெல்லை பஸ் நிலையம் பராமரிப்பு - பாதுகாப்பு இல்லாததால் பயணிகள் பீதி
நெல்லை பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி மேற்கொள்ளப்படுவதால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படாததால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், உடன்குடி பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் உடன்குடி பஸ் நிலையத்துக்கு தான் வர வேண்டும். உடன்குடியை மையமாக கொண்டு சென்னை கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள பஸ் நிலையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த பஸ் நிலையத்தின் மேற் கூரை பெயர்ந்து காணப்பட்டது. சுவர்கள் பழுதாகி கிடந்தன. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கோரிக்கையை அடுத்து தற்போது பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
தற்போது இடிப்பு பணி நடந்து வருகிறது. இருப்பினும் பஸ்கள் வழக்கம் போல் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்கிறது. பஸ் நிலையத்தில் மேற்கூரை உடைக்கப்பட்டு நீண்டு கொண்டு இருப்பதால் பயணிகள் பீதியில் உள்ளனர்.
மேலும் உடைக்கப்பட்ட கற்குவியல்கள் பயணிகள் நடமாட முடியாத அளவுக்கு கிடப்பதால் காலை பதம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் மோசமாக நிலையில் இருப்பதால் முழுவதுமாக இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.