தாலிக்கு தங்கம்.. இலங்கை அகதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுமா? அமைச்சர் சரோஜா பதில்
சென்னை: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சரோஜா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சமூகநலன், சத்துணவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கை மீது நேற்று விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மகளிர் நலனுக்கென தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சமூதாய உதவி மையம் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
19,250 சத்துணவு மையங்களுக்கு உயர் அழுத்த அடுகலன்கள் மற்றும் 12 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள், 11 கோடி ரூபாயில் வழங்கப்படும் என்றும், சென்னை கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் நான்கரை கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டப்படும் எனவும் கூறினார்.
மேலும் அங்கன்வாடி மையத்தில் உள்ள 30 ஆயிரம் காலிப்பணிடங்கள் விரைவில் நிரப்பப்படும். முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 15 தேதி அனுசரிக்கப்படும், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களுக்கு 1.40 கோடி செலவில் சுகாதார பைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா குறிப்பிட்டார்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் வழங்குவதை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications