எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்த சுப்ரீம்கோர்ட் கருத்துக்கு ஈஸ்வரன் வரவேற்பு
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்றத்தின் அறிவுரை வரவேற்கத்தக்கது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்களில் உரிய விசாரணையின்றி கைது செய்யக்கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் புகார்களிலும் விசாரணையின்றி கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் அமர்வு முதன்முறையாக முன் ஜாமீன் வழங்கியது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையை காவல்துறையினர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு உரிமை மறுப்பு
இதுதொடர்பான அறிக்கையில், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவில் பதிவாகும் வழக்குகளில் தவறாகவும், உள்நோக்கத்தோடும் புனையப்படும் வழக்குகள் ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் உரிமைகளை மறுப்பதாக அமைகிறது. மற்ற சாதிகளை சார்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் இருக்கின்ற பகையின் காரணமாக பழிதீர்க்கும் நடவடிக்கையாக எஸ்.சி, எஸ்.டி பிரிவினரில் ஒருவரை தூண்டி வழக்கு போட வைப்பது எதார்த்தத்தில் இருக்கின்ற உண்மை.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
இப்படிப்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கைகள் சாதிகளுக்கு இடையேயான மிகப்பெரிய வன்முறைகளுக்கு வித்திட்டு விடுகிறது. வன்கொடுமை சட்டப்பிரிவு எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை பாதுகாக்கும் கேடயமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அதுவே வாளாக மாறி மற்றவர்களை துன்புறுத்த துணிவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. இதை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
அரசியலமைப்புக்கு எதிரானது
2015-ம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளில் 15 முதல் 16 விழுக்காடு போலி வழக்குகள் என தெரியவந்துள்ளதாகவும். எனவே அப்பாவி பொதுமக்களை மதம் அல்லது சாதியின் பெயரால் பாதிப்புக்குள்ளாக்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கலவரங்கள் தடுக்கப்படும்
இதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றுத்தான் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், கீழமை நீதிமன்றங்களில் முன் ஜாமீன் வழங்க முடியும் என்பதும் இந்தியாவில் பெருவாரியான மக்களால் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு. இதன் மூலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு சிலரால் தூண்டப்படும் கலவரங்களும், வன்முறையும் தடுக்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை அதிகாரிகள் இந்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.