உதவி தொகை நிறுத்தத்தால் பட்டினியில் வாடும் முதியோர்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல ஆயிரம் முதியோர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அது நிறுத்தப்பட்டதால் பலர் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் முதியோர் உதவி தொகையை எதிர்பார்த்து தள்ளாத வயதிலும் பலர் வங்கிக்கு சென்று முதியோர் பென்சன் வந்து விட்டதா என்று பார்த்து வருகின்றனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பித்த முதல் 2 மாதங்களுக்கு மட்டுமே பென்சன் வந்ததாகவும், பிறகு அடியோடு நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முதியோர்களில் பலருக்கு வாரிசுகள் இல்லாததால் அவர்கள் பிச்சையெடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ஒரு முதியோர் கூறும் போது ,"எனக்கு குடும்பம் கிடையாது. முதியோர் உதவி தொகை ரூ.1000 மாதந்தோறும் கிடைத்து வந்தது. அதை வைத்து சாப்பிட்டு வந்தேன். தற்போது மூன்று மாதமாக வங்கியில் பணம் கிடைக்காததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அடுத்தவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கியில் பணம் வந்து விட்டதா என்று பார்க்க பல கிமீ தூரம் நடக்க வேண்டியுள்ளது. என்னால் தொடர்ந்து அலைய முடியாததால் தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ளேன். என் நிலையை கருதி அக்கம்பக்கத்தினர் கஞ்சி கொடுத்து வருகின்றனர்.
என்னை போலவே நெல்லை மாவட்டத்தில் பல கிராமங்களில் உள்ள முதியோர்களுக்கும், ஆதரவற்றோருக்கும் இது போன்று பென்சன் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அவர்களின் கதியும் அதே கதிதான். வேறு என்ன சொல்ல. உண்மையிலேயே பென்சன் பணம் ஓதுக்கப்பட்டதா, அல்லது வரவில்லையா என்று தெரியவில்லை. இப்படியே போனால் முதியோர்கள் அனைவரும் பிச்சையெடுக்க வேண்டியது தான்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
தற்போது பணியில் இருக்கும் அதிகாரிகளும், புதிதாக அரசு பணியில் சேரும் இளைய தலைமுறையினரும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். உதவி தொகை ஓதுக்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக விரைந்து வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.