ஆட்சிக்குள் ஓங்குகிறது ஓபிஎஸ் அணியின் கை! எடப்பாடி விட்டுக்கொடுக்க இதுவா காரணம்?
Recommended Video
சென்னை: சட்டசபையில் அவை முன்னவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என இன்று அறிவிக்கப்பட்டது.
சட்டசபை செயலாளர் க.பூபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வம் கை சட்டசபையில் ஓங்கியுள்ளது. ஆனால், சுயேச்சை உறுப்பினர் தினகரனுடன் அவ்வப்போது நேருக்கு நேர் வாதம் செய்ய வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் வந்துள்ளார்.
வரும் 8ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடர் களைகட்டப்போவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
முக்கிய பதவி
முன்னவர் பதவி என்பது மிக முக்கியமானது. அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தகுதியுள்ள நபர் முன்னவர். எந்த துறையை சேர்ந்த குற்றச்சாட்டு, விமர்சனம், கேள்வியாக இருந்தாலும் முன்னவர் பதில் சொல்ல முடியும். சட்ட நுணுக்கங்கள், அவையின் மரபுகளை முன்னவர் பதவியில் உள்ளவர்கள் கரைத்து குடித்திருக்க வேண்டும். அவை விதிகளுக்கு மாறாக கேள்விகள் எழுந்தால் அப்போது குறுக்கிட்டு 'பாயிண்ட் ஆப் ஆர்டர்' கொண்டுவரும் தெளிவு பெற்றவராக முன்னவர் இருக்க வேண்டும். தவறாக நடப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை முன்மொழிவதும் இவரது பணி.
செங்கோட்டையன் பதவி
இதுபோன்ற பதவியில்தான் பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவி காலத்திலும் பன்னீர்செல்வம் இந்த பணியை ஓரளவு திறம்பட செய்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம், தனி அணி கண்டபோது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி, மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்த்ததோடு, முன்னவர் பதவி கொடுத்தார்.
மதுசூதனனுக்கு போட்டியிட வாய்ப்பு
பன்னீர்செல்வம் அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியினரோடு இணைந்துவிட்ட பிறகு முதலில் பன்னீர்செல்வம் தரப்பின் கைககள் ஒடுக்கப்பட்டதாக முனுமுனுப்பு எழுந்தது. ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து நிலை மாறியது. ஆர்.கே.நகரில் வேட்பாளராக கடந்த முறை ஓபிஎஸ் அணி சார்பில் நின்ற மதுசூதனன் அதிமுக சார்பில் இப்போது நிறுத்தப்பட்டார். இது ஓபிஎஸ் அணியின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது.
செய்தித்தொடர்பாளர் பட்டியல்
டிசம்பர் 3ம் தேதி வெளியான 12 பேர் கொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் மொத்தமுள்ள 5 இடங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாடு சட்டசபை அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் பதவி பெற்றுள்ளதும், அந்த அணியின் கை ஓங்கியிருப்பதையே காட்டுகிறது. தினகரன் தலையெடுத்துள்ள இந்த இக்கட்டான நேரத்தில் பன்னீர்செல்வத்துடன் நட்பு பாராட்டி இணக்கமாக செல்வதே அரசை காக்கும் வழி என எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதே இதுபோன்ற முன்னுரிமைகளுக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.