ஆக.10-ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம்.. ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் மதுசூதனன் பேட்டி
அதிமுக இணைப்பு குறித்து தினகரன் அறிவிப்பு தொடர்பாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: ஆகஸ்ட் 10-ஆம் தேதி தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மதுசூதனன் தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு குறித்து அதிமுக அம்மா அணியினர் சாத்தியம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் ஓபிஎஸ் அணியினரோ தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்கின்றனர்.
இதனிடையே டிடிவி தினகரனோ அதிமுக இணைப்பு குறித்து சசிகலா அளித்த 60 நாள்கள் காலக் கெடு முடிவடைந்ததால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

புதிய நிர்வாகிகள்
மேலும் புதிய நிர்வாகிகளையும் தினகரன் நியமனம் செய்தார். இந்நிலையில் அதிமுக இணைப்பு குறித்து தினகரன் அறிவிப்பு தொடர்பாக தங்கள் கழக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

போராட்டம்
அப்போது டெங்கு காய்ச்சலை தடுக்கத் தவறியது, நீட் தேர்வுக்கு விலக்கு பெறாதது, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாதது, தமிழக அரசில் நடைபெறும் ஊழல்கள் ஆகிய தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வரும் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

யார் யார் பங்கேற்பு
மேலும் மாவட்டந்தோறும் நிர்வாகிகள் நியமனம் குறித்த விவாதமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திட்டமிட்டபடி போராட்டம்
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஒபிஎஸ் அணியின் மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆகஸ்ட் 10- ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். போலீஸ் அனுமதி அளிக்காவிட்டாலும் போராட்டம் நடத்துவது உறுதி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications