10ம் வகுப்பு தேர்வில் 199 கைதிகள் பாஸ்... 421 மார்க் அள்ளிய ஆயுள் தண்டனைக் கைதி!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ஹக்கீம் என்பவர் 421 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
மற்ற பள்ளி மாணவர்களைப் போலவே தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 226 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். தற்போது அவர்களில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஹக்கீம் 421 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் புதுக்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி பிரசாத் உள்ளார். இவர் 416 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
திருச்சி சிறையில் உள்ள கைதி சரவணன் 412 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 103 கைதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 94 பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.