திருச்சி - திருநெல்வேலி ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க பயணிகள் கோரிக்கை
ராதாபுரம்: திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ராதாபுரம் நான்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்க ராஜ்குமார், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும், நெல்லை எம்.பிக்கும் அனுப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது...
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்பகுதியில் அமைந்துள்ள தாலுகாக்கள் ராதாபுரம் மற்றும் நான்குநேரி ஆகும். இந்த இரண்டு தாலுகாவில் நான்குநேரி தாலுகாவில் உள்ள மக்கள் தொகை 2,25,457 ஆகவும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள மக்கள் தொகை 3,02,268 ஆகவும் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் போக்குவரத்திற்கு ரயிலையே பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த தாலுகா பயணிகள் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும், வணிக சம்மந்தமாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணம் செய்கின்றனர்.
வள்ளியூரிலிருந்து காலை 8:10 மணிக்கு நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயிலை அடுத்து மாலை 6:15 மணிக்கு தான் திருநெல்வேலி, மதுரை மார்க்கம் கன்னியாகுமரி - சென்னை தினசரி ரயில் வசதி உள்ளது.
இதை போன்று, மறுமார்க்கமாக மதுரை, திருச்சியிலிருந்து அதிகாலையிலிருந்து மதியம் வரை எந்த ஒரு தினசரி ரயில் வசதியும் இல்லை. இதனால், பகல் நேரங்களில் சுமார் 10 மணி நேரம் இரண்டு மார்க்கங்களிலும் எந்த ஒரு தினசரி ரயிலும் இல்லாதததால் வள்ளியூர் ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில்வழித்தடம் 02-04-1981-ம் ஆண்டு துவங்கப்பட்டு இன்றுவரை 33 ஆண்டுகளாக பகலில் பத்து மணிநேரம் ஒரு தினசரி ரயில் கூட இயக்காமல் இந்தவழித்தடம் உள்ளது.
வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. இதனால் இந்த ரயில் நிலையங்கள் கோட்ட அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
பல கோடிகள் செலவு செய்து ரயில் வழித்தடம் அமைத்தும் கூடுதல் ரயில்கள் இயக்காமல் இருப்பது எந்த காரணத்துக்காக ரயில்வழித்தடம் அமைக்கப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமலே உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2012 ம் வருடம் ரயில் பட்ஜெட்டில் திருச்சி - திருநெல்வேலி வழி தடத்தில் பகல் நேர தினசரி இன்டர்சிட்டி ரயில் அறிவிக்கபட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சியிலிருந்து காலையில் 7:15க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்ப்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக மதியம் 1:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகின்றது. மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிருந்து மதியம் 2:15 மணிக்கு க்கு புறப்பட்டு இரவு திருச்சிக்கு 8:00 மணிக்கு சென்றடைகின்றது.
இந்த ரயில் பகல் நேர ரயிலாக இருப்பதால் ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா வியாபாரிகளுக்கு மதுரை, விருதுநகர் சந்தையிலிருந்து சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும். எனவே, இந்த ரயிலை ராதாபுரம் மற்றும் நான்குநேரி தாலுகா மக்களின் நலன் கருதி நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மேலும், இந்த ரயிலானது வள்ளியூர் மற்றும் நான்குநேரி ரயில் நிலையத்தில் நிரந்தரமாக நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.