500,1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் கால்கடுக்க காத்திருப்பு... கடும் எரிச்சலில் மக்கள்
மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கால்கடுக்க காத்திருக்க நேரிடுவதால் பலரும் எரிச்சலைடைந்து வருகின்றனர்.
சென்னை: 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறினாலும், மக்களுக்கு அது ஒன்றும் எளிதாக காரியமாக இல்லை. மோடி ஏன் திடீர்னு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் என்பதுதான் பலரது பேச்சாக இருக்கிறது.
படித்தவர்கள் எளிதாக பணத்தை மாற்றினாலும் சில 500 ரூபாய் நோட்டுக்களை மற்றுமே வைத்துள்ள படிக்காத, சில இடங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக பலரது கையில் ஆதார் அட்டை இருந்தாலும், பணத்தை மாற்ற நிரப்ப வேண்டிய படிவம் ஆங்கிலத்தில் இருப்பது கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
வங்கியில் நீண்ட வரிசை
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் ரூ.4 ஆயிரம் வரை பெறலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இன்று காலை முதலே வங்கிகள், தபால் நிலையங்கள் வாயிலில் மக்கள் அதிகளவில் திரண்டனர்.
விண்ணப்ப படிவங்கள்
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, ஏதேனும் ஒரு அடையாள சான்றை காட்டி மக்கள் தங்களின் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நோட்டுக்களை மாற்ற ஆதார் எண், பான் எண், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள சான்றுகள் ஜெராக்ஸ் கேட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ரிசர்வ் வங்கி
சென்னையைப் பொருத்தவரை தென் மண்டல ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னை முழுவதும் உள்ள 1,820 தனியார் மற்றும் அரசு வங்கி கிளைகளிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏழுமணிமுதல் வரிசை
காலை ஏழுமணி முதலே வரிசையில் காத்திருந்த பலரும், ஜெராக்ஸ் எடுத்து வைத்திருக்கவில்லை. பணம் மாற்ற அடையாள சான்று ஜெராக்ஸ் தேவை என்று கூறியதை அடுத்து மீண்டும் ஜெராக்ஸ் எடுக்க ஓடினர். மீண்டும் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதே என்று கவலை தெரிவித்தனர்.
பல மணி நேர காத்திருப்பு
ஒரே ஒரு 2 ஆயிரம் ரூபாய் வாங்க மணிக்கணக்கில் காத்திருந்ததாக கூறினார் வேலம்மாள் என்ற பெண். பார்ம் நிரப்பி கொடுத்து நான்கு 500 ரூபாய் கொடுத்ததாகவும், அதற்கு 2000 ரூபாய் கொடுத்தாகவும் தெரிவித்தார். வயதானவர்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்திருந்தால் நல்லது என்று கூறினார் வேலம்மாள்.
ஆதார் கார்டு, பான் கார்டு
பணத்தைப் பெற்றுக்கொள்ள ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பாரத ஸ்டேட் வங்கி ஆதார் அல்லது பான் கார்டு மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தங்களது சிரமத்தை புரிந்து கொள்ளாமல் வங்கி நடந்து கொள்வதாக அதிருப்தி தெரிவித்தனர்.
கால்கடுக்க நடந்து வந்தேன்
காலையில் ஆறு மணியில் இருந்தே வரிசையில் காத்திருக்கிறேன் சாப்பிடவில்லை. பெட்ரோல் போட முடியவில்லை. வீட்டிலிருந்து வங்கிக்கு நடந்தே வந்துள்ளேன். நாலாயிரம் கொடுப்பதாக சொல்லி ஆயிரம் தான் கொடுத்திருக்கிறார்கள். அதற்கே விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை நகல் என்று அலைய விடுகிறார்கள் என்று வெறுப்போடு கூறினார்.
கட்டுக்கடங்கா கூட்டம்
ஒவ்வொரு வங்கியின் முன்னும் குறைந்தது 3000 பேராவது திரண்டிருக்கிறார்கள். மக்கள் கூட்டத்தை சமாளிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் கையில் பணமிருந்தும் வங்கியில் அதை மாற்றி அத்தியாவசியப் பொருட்களை விற்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். நம்ம பணம் கையில் இருந்தும் அதை மாற்ற முடியாமல் தவித்து வருவதாக கூறும் அவர்கள் மோடியின் இந்த அறிவிப்பு நல்லது செய்தாலும் பணத்தை மாற்ற நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறதே என்பதுதான் திருவாளர் பொது ஜனத்தின் வேதனையாக இருக்கிறது.
சாமான்ய மக்கள் பாதிப்பு
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் உடனடியாக பாதிக்கப்பட்டது என்னவோ சாதாரண பொதுமக்கள்தான்.வங்கிகளில் முதல் ஆளாக வந்து நின்றவர்கள் சாதாரண ஏழை, எளிய மக்கள்தான். அவர்கள்தான் அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் முதல் ஆளாக வங்கிகளின் வரிசையில் வந்து நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.