ஜெயலலிதா மீது அவதூறு.. வழக்கில் ஆஜராகாத விஜயகாந்த்துக்கு பெரம்பலூர் கோர்ட் பிடிவாரண்ட்
பெரம்பலூர்: அவதூறு வழக்கில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக பெரம்பலூர் அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பெரம்பலூரில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா பற்றி விஜயகாந்த் அவதூறாக பேசியதாக கூறி, தமிழக அரசு சார்பில் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், பல முறை சம்மன் அனுப்பியும், ஒருமுறையும், விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே இதேபோன்ற அவதூறு வழக்கு ஒன்றில், விஜயகாந்த்துக்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் விஜயகாந்த் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அதற்கு இடைக்கால தடை பெற்றுள்ளார். இதேபோல, அவதூறு வழக்கில் ஆஜராகாமல் இருந்த விஜயகாந்த்தை விழுப்புரம் நீதிமன்றம் நேற்று கண்டித்தது. அவரை ஆகஸ்ட் 16-ல் ஆஜராக கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.