நரபலி விவகாரம்: பிஆர்பி நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன்
மதுரை: நரபலி விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சகாயத்திடம் மனு அளித்தனர். அப்போது, பி.ஆர்.பி. நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் அளித்த புகார் மனுவில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மனநலம் பாதித்தவர்களை நரபலி கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், நேற்று சட்ட ஆணையர் சகாயம் மேற்பார்வையில் சேவற்கொடியான் அடையாளம் காட்டிய சின்னமலம்பட்டி மயானப் பகுதியில் தோண்டிப் பார்க்கப் பட்டது. அப்போது அங்கிருந்து ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப் பட்டன.
மீட்கப்பட்ட அந்த எலும்புக் கூடுகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. அவை நரபலி கொடுக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுடையதா அல்லது வேறு யாருடையதாவதா என்பது குறித்து மருத்துவ அறிக்கைகளுக்குப் பின்னரே தெரிய வரும். ஏனென்றால், எலும்புக் கூடுகள் மீட்கப் பட்ட பகுதியை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் நேற்று எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக நாளை காலை கீழவளவு போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications