ஐபிஎல் போட்டிகள் மாற்றம்: சென்னை போலீஸ் மீது பழியைப் போடும் ராஜீவ் சுக்லா!
போலீஸ் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்படுவாதாக ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையில் நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்யப்படுவாதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலத்த எதிர்ப்பை மீறி போட்டி நடைபெற்றதால் சென்னையில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே பார்வையார்கள் போல் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் மைதானத்துக்குள் செருப்புகளை வீசினர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஐபிஎல் நிர்வாக தலைவர் ராஜீவ் சுக்லா, சென்னை போலீஸ் பாதுகாப்பு தர மறுப்பதால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளை புனே உள்ளிட்ட இடங்களில் நடத்த பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் போட்டி நடத்தும் இடங்களை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.