இன்னும் 2 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து… சுகாதாரத் துறை அறிவிப்பு..
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கிடைத்ததை உறுதி செய்யும் வகையில், சுகாதாரத்துறை இன்றும், நாளையும் வீடு வீடாக ஆய்வு நடத்தி விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க திட்டமிட்டுள்ளது.
போலியோ பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. பஸ், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், சுகாதார மையங்கள் என, தமிழகம் முழுவதும் அமைக்கப் பட்டன.
சுகாதார ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொதுமக்கள் ஆர்வமுடன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுச் சென்றனர். சுங்கச்சாவடி வழியாகச் சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி "தமிழகத்தில், 70.32 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்க திட்டமிடப்பட்டு 67.5 லட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து சரியாகக் கிடைத்துள்ளதா என அறியும் வகையில் ஊழியர்கள் இன்றும், நாளையும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவர்.
விடுபட்ட குழந்தைகளுக்கு அப்போது சொட்டு மருந்து கொடுக்கப்படும். இது தவிர பஸ், ரயில் நிலையங்களில் இரண்டு நாட்கள் சொட்டு மருந்து கொடுக்கப்படும். சொட்டு மருந்து கிடைக்காவிட்டால் "104' என்ற மருத்துவச் சேவைக்கு புகார் செய்யலாம்"இவ்வாறு அவர் கூறினார்.