கூடங்குளம் 2 அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்.. தென் தமிழகத்திற்கு "ஷாக்"!
கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1000 மெகா வாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் ரஷ்ய நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. முதல் அணு உலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு மின் உற்பத்தி துவங்கப்பட்டது. இரண்டாவது அணு உலை 2016-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
இதில் முதல் அணு உலையை கடந்த ஆண்டு அக் 10-ம் தேதியன்றும், இரண்டாவது அணு உலையை கடந்த ஆண்டு அக் 15-ம் தேதியும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரண்டு அணு உலைகளிலும் சுமார் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த மாதம் 13-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் இரண்டாவது அணு உலையில் மட்டுமே மின் உற்பத்தி நடந்தது. மின் உற்பத்தி நடந்து வந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இரண்டாவது அணு உலையிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரண்டு அணு உலைகள் மூலம் கிடைத்து வந்த 1125 மெகா வாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து வளாக இயக்குநர் சாகு கூறுகையில், இரண்டாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஐந்து நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கும்.
முதலாவது அணு உலையில் யுரேனிய எரிகோள்கள் மாற்றப்படுகிறது. இது முடிந்ததும் அதிலும் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்தார்.