அசந்து தூங்கிய ஏட்டையா... மருத்துவமனையில் இருந்து 'எஸ்கேப்' ஆன திருடன்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி காவலுக்கு இருந்த போலீசார் அசந்த நேரம் பார்த்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள ஆர்.சி சர்ச்சில் கடந்த வாரம் ஒரு வாலிபர் புகுந்து திருட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சிப்காட் போலீசில் ஓப்படைத்தனர். முதலில் அந்த நபர் தனது பெயர் முகவரியை மாற்றி கூறினார். சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்த முருகன் என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டாபுரம்பட்டியில் உள்ள ஒரு கோயில் கோபுரத்தில் செம்பு கலசத்தை திருடிய வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
முருகன் உடலில் காயம் இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5வது மாடியில் ஆண்கள் வார்டில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிப்காட் நிலைய ஏட்டு மாரியப்பன், போலீசார் ரத்தினகுமார், செல்வகுமார் ஆகியோர் 24 மணி நேரமும் அIங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அதிகாலையில் போலீசார் சற்று அசந்து தூங்கியவுடன் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டிஎஸ்பி துரை விசாரணை மேற்கொண்டுள்ளார். போலீசாரின் அஜாக்கிரதையால் விசாரணை கைதி தப்பிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.