வந்தவாசியில் பரபரப்பு.. மதுக் கடைமுன் விநாயகர் சிலை.. திடீர் பஜனை-பூஜை செய்து பொதுமக்கள் எதிர்ப்பு
மதுபான கடையை மூடக்கோரி விநாயகர் சிலை வைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுது.
வந்தவாசி: வந்தவாசியில் மதுபானக் கடையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி பூட்டப்பட்ட கடை முன் விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் பூஜை நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காந்தி சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையினால் நாள்தோறும் ஏராளமான "குடிமகன்கள்" மது அருந்திவிட்டு, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர்.
இதனால் இந்த அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலமுறை சாலைமறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட மதுபான கடை மீண்டும் அதிகாரிகள் திறக்க முயற்சிப்பதாக பொதுமக்களுக்கு செய்திகள் பரவ தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மூடப்பட்ட கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், திடீரென விநாயகர் சிலையை வைத்து பூஜைகளை செய்ய துவங்கி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பொதுமக்களின் இந்த திடீர் விநாயகர் பஜனையால் பரபரப்பு ஏற்பட்டது