சென்னையில் தரையிறங்கிய குட்டி உளவு விமானம்! போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் கேமராவுடன் இறங்கிய ட்ரோன் வகை குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் மேற்பரப்பில் இன்று மதியம், ட்ரோன் என்று அழைக்கப்படும் குட்டி விமானம் வந்து தட்டுத்தடுமாறியபடி தரையிறங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அச்சமடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த ட்ரோன் விமானத்தில் கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட கூடிய வசதி கொண்டதாகும்.
கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்களை பொதுவாக ராணுவத்தினர் பயன்படுத்துவார்கள். எதிரிகளின் இடத்தை நோட்டமிட இந்த விமானம் பயன்படுத்தப்படும். அதேபோல தீவிரவாதிகளும் இதுபோன்ற உளவு விமானங்களை பயன்படுத்திய சம்பவங்களும் உலகின் பல இடங்களில் பதிவாகியுள்ளன. எனவே, இதுவும், தீவிரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் முழு வீச்சில் விசாரணையை தொடக்கினர்.
முதல்கட்ட விசாரணையில், இந்த விமானம் திருமண நிகழ்ச்சியை படம் பிடிக்க பயன்படுத்தப்படும் ட்ரோன் விமானம் என்று தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியை உயரத்தில் இருந்து படம் பிடிக்க இதுபோன்ற ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது மேலை நாடுகளில் சகஜம். ஆனால் இந்தியாவில் ட்ரோன் விமானத்தை பயன்படுத்தி திருமண சூட்டிங் செய்வோர் குறைவே. எனவே இந்த ட்ரோன் குறித்த மேலதிக தகவல்களுக்காக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.