கிரானைட் முறைகேடு... மாயமான மலைகள்... காணமல் போன கண்மாய்கள்: சகாயம் அறிக்கை நாளை தாக்கல்
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சகாயம் குழுவினர் நாளை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். கிரானைட் குவாரிகளின் அதிபர்கள் பலரும் மலைகள், கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் என அனைத்தையும் கபலீகரம் செய்துவிட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களை முறைகேடாக கொள்ளையடித்திருப்பது ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 11 மாதங்களாக மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் 21 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். மக்களிடம் மனுக்களை பெற்ற சகாயம், கள ஆய்வு, நேரடி விசாரணை, வாக்குமூலம் சேகரிப்பு என கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆதாரங்களை திரட்டியுள்ளார். அந்த அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும், சகாயம் மேற்கொண்ட விசாரணைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
ரூ.16000 கோடி இழப்பீடு
கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள கொள்ளைகள் குறித்து கடந்த 2012ம் ஆண்டு அறிக்கை அறித்தார் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம். அந்த அறிக்கையில்,
கிரனைட் முறைகேடுகளால் தமிழக அரசிற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடவே தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டது.
98 வழக்குகள் பதிவு
மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகோடு குறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து மேலூர், கீழவளவு மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையங்களிலும், மாவட்ட குற்றப்பிரிவு துறையிலும் சட்டவிரோத கிரனைட் முறைகேடு, நிலமோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
150 பேர் கைது
பிஆர்பி கிரானைட்ஸ், மதுரா,சிந்து, ஜெம் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் மீது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சட்ட ஆணையம் ஒன்றை அமைத்து கிரனைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சகாயம் விசாரணை
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ,கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி முதல் மதுரையில் விசாரணையை தொடங்கினார் சகாயம் ஐ ஏ எஸ். முதல்கட்ட விசாரணையில் கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் புகார்களைப் பெற்றார். அதில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மோசடி, கொலை மிரட்டல், நரபலி உள்ளிட்ட200க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன.
சிதைந்த சின்னங்கள்
அடுத்தகட்ட விசாரணையில் புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக சந்தித்து கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர், விவசாய விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டார். இவ்விசாரணையில் மலைகள் குன்றுகளாகவும், நீர்நிலைகள் சாதாரண இடங்களாகவும் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்ததோடு, வருவாய் கணக்குகளும் திருத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பொக்கிஷமலை
மேலூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பொக்கிஷ மலை, சர்க்கரை பீர் மலை என்றும் அழைக்கப்பட்டது. இந்து, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர், அந்த மலைக்குச் சென்று வழிபட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று அப்போது நம்பி வந்ததாகச் சொல்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
விழுங்கிய கிரானைட் முதலைகள்
மதநல்லிணக்கத்தின் அடையாளமாகவும், தொன்மையின் உதாரணமாகவும் வீற்றிருந்த பொக்கிஷ மலையின் பெரும்பகுதியை தற்போது காணவில்லை. மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்த இந்த மலையில், 35 ஏக்கர் பரப்பளவிற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெட்டி எடுக்கப்பட்டிருப்பது சகாயம் குழு ஆய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழமை வாய்ந்த அந்த மலையை கூறுபோட்டு விழுங்கிக் கொண்டன பிஆர்பி, ஒலிம்பஸ் போன்ற கிரானைட் நிறுவனங்கள்.
சிதைக்கப்பட்ட மலைகள்
அரிட்டா பட்டியில் உள்ள புறாக் கூண்டு மலை, கலிஞ்சமலை, ராமாயி மலை, கழுகுமலை, ஆப்டா மலை, தேன் கூடுமலை போன்றனவும் கிரானைட் நிறுவனங்களினால் சிதைக்கப்பட்டுள்ளன. கீழவளவு கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வெள்ளூத்து மலை முற்றிலுமாக கிரானைட் கொள்ளையர்களால் கபளீகரம் செய்யப்பட்டது சகாயம் ஆய்வின் போது அம்பலமானது.
பாலைவனமான நிலங்கள்
முல்லைப்பெரியாறு பாசன கால்வாய்கள் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் பொய்த்துப்போய் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியே பாலைவனமாகி போனது கண்டு அதிர்ச்சியடைந்தார் சகாயம்.
ஆளில்லா விமானங்கள்
கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் முறைகேடுகள் நடைபெற்ற குவாரியின் காட்சிகள் முழுவதையும் பதிவு செய்தார். புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து அவர்கள் குற்றச்சாட்டுகளையும், வாக்குமூலங்களையும் வீடியோ பதிவாக பெற்றார்.
அதிகாரிகளிடம் விசாரணை
இதனைத்தொடர்ந்து வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறை என அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து கிரனைட் முறைகேடுகள், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுவிவரங்களை அளிக்குமாறு கூறினார். அதனடிப்படையில் வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறையினர் தங்களது தரப்புத் தகவல்களை பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்தனர்.
நீதிமன்றத்தில் அவகாசம்
தொடர்ந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலூர் பகுதியில் மேலூர் காவல் டிஎஸ்பி மங்களேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. ஒத்தக்கடை பகுதியில் ஊர்மெச்சிகுளம் காவல் உதவி காவல்கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் விசாரணை நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நகர்ந்த விசாரணையில் அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசமும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
நரபலி புகார்
20ஆம் கட்ட விசாரணை நடைபெற்ற சூழலில் கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் நரபலி புகார் ஒன்றை அளித்தார். அதில், பிஆர்பி கிரனைட் நிறுவனத்தில், 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை வாகன ஓட்டுநராக தான் பணியாற்றியதாகவும், அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட இருவரை மேலூர் அருகே இ.மலம்பட்டியில் நரபலி கொடுத்து புதைத்ததை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சுடுகாட்டில் தங்கிய சகாயம்
1999ல் நடந்ததாகக் கூறப்படும் இ. மலம்பட்டி மணிமுத்தாறு ஓடைப்பகுதிக்கு சென்ற சகாயம் தடயங்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் 12.09.15 அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கினார். சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டிய போது 8 எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து சில நரபலி புகார்கள் வந்தன. நரபலி புகார்கள் வந்த இடத்தில் தோண்டப்பட்டு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை திரும்பிய சகாயம்
கிரானைட் குவாரியில் நடந்த நரபலி விவகாரம் குறித்து சகாயம் தனது அறிக்கையில் தெரிவிக்கவுள்ளார். இதற்காக போலீசாரிடம் தகவல் கேட்டிருந்தார். அது தொடர்பான அறிக்கையை போலீசார் சில தினங்களுக்கு முன்பு வழங்கினர். இதனால் விசாரணையை முடித்துக்கொண்ட சகாயம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 11.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை சென்றார்.
25 பார்சலில் ஆவணங்கள்
விசாரணை முடிந்ததை தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் சுமார் 25 பார்சலாக கட்டப்பட்டது. இவற்றை இரண்டு காரில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது. இதில் கமிஷனில் பணியாற்றிய ஊழியர்களும் உடன் சென்றனர். ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் திட்டமிட்டபடி நாளைய தினம் தான் மேற்கொண்ட அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். சகாயம் தாக்கல் செய்யும் அறிக்கை மூலம் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.