பள்ளிகளில், பஸ், வேன் நல்லாயிருக்கா? ஈரோடில் அதிகாரிகள் ஆய்வு - வீடியோ
ஈரோடு கல்வி மாவட்டத்தில் 95 பள்ளிகளை சேர்ந்த 671 பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம்தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். ஈரோடு கல்வி மாவட்டத்தில் 95 பள்ளிகளை சேர்ந்த 671 பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கலெக்டர் பிரபாகர், எஸ்.பி, சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு கல்வி மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் பெருந்துறை வட்டார போக்குவரத்து பகுதிகளில் உள்ள 95 பள்ளிகளை சேர்ந்த 671 பள்ளி வாகனங்கள் ஈரோடு ஏ.ஈ.டி.பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது என்றனர். ஆய்வின்போது வாகனங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு கருவிகளை கொண்டு செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது.