செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை இறுதி கட்டத்தை எட்டியது.. விரைவில் சோதனை ஓட்டம்
புனலூர்: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் முழுவதும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழித்தடமான செங்கோட்டை -கொல்லம் ரயில் பாதை இரு மாநில மக்களுக்கும் 105 ஆண்டு காலமாக வர்த்தக வழித்தடமாக இருந்தது. இந்த தடத்தில் கடந்த 1997ம் ஆண்டு மீட்டர் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழக- கேரள மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன செங்கோட்டை-புனலூர் ரயில்பாதை மலைகள், குகைகள், பாலங்கள் ரயில்வே துறைக்கு சவால் விடுக்கும் வகையில் இருந்த இத்திட்டத்தை தென்னக ரயில்வே பல்வேறு கட்ட ஒப்பந்தங்கள் மூலம் ரயில் பாதை அமைப்பு, குகைகள் சீரமைப்பு, பாலங்கள் கட்டுமானம் என தனித்தனி பணிகளாக ஒப்பந்தங்கள் வழங்கியதைத் தொடர்ந்து பணிகள் வேகம் பெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இம்மார்க்கத்தில் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆரியங்காவு,எடமன், தென்மலை ஆகிய பகுதிகளில் உள்ள 5 குகைகளிலும் புதியதாக அமைக்கப்பட்ட 6வது குகையிலும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் 3 மாதங்களில் முடிவடையும் என்றும் பிப்ரவரி இறுதியில் இப்பணிகளை ஒப்பந்ததாரர்கள் முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒபபடைக்கப் பட உள்ளதாகவும் அதன்பின் ரயில் போக்குவரத்து பாதுகாப்புத் துறை ஆணையர் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு சோதனை ஓட்டத்தை நடத்தி முடிப்பார் என்றும் வரும் 2017ஆம் ஆண்டு மார்ச் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தென்னக ரயில்வே சார்பில் அதிகாரிகள் குழுவினரால் புனலூர் முதல் இடமன் வரை அமைக்கப்பட்டுள்ள அகலரயில் பாதையில் கொல்லம்-புனலூர் பயணிகள் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. துரிதமாக நடக்கும் இப்பணிகளால் இரு மாநில எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.