செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை திட்டப் பணிகள் திடீர் நிறுத்தம்
தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை: செங்கோட்டை: தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டை - புனலுார் இடையேயான, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2010, செப்., 20ல், இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை பணி துவங்கிய போது, 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆறு ஆண்டுகளாகியும் பணிகள் முடியவில்லை. செங்கோட்டை- புனலூர் மீட்டர் கேஜ் பாதையில், பகவதிபுரம் - ஆரியங்காவு இடையே 900 மீட்டர் குகை பாதை உள்ளது. கழுதுருட்டி - எடமண் இடையே ஒரு புது குகை பாதை உட்பட நான்கு குகை பாதைகள் உள்ளன. தற்போது இதே வழியில் 6-ஆவதாக 165 மீ., நீளத்திற்கு, 70 கோடி ரூபாயில், ஒரு புதிய குகை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து கொல்லத்தைச் சேர்ந்த ஒருவரிடம் சப் காண்டிராக்ட்டாக கொடுத்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு கடந்த சில வாரங்களாக பணம் சீராக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெள்ளிக்கிழமை முதல் அந்த துணை ஒப்பந்தக்காரர் 6 வது குகை தோண்டும் பணியை நிறுத்தியுள்ளார்.
இதனால் ரயில்பாதை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாததால் வாகன வாடகை கொடுக்க முடியவில்லை எனவும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தொழிலாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலைக்கு செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.