1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் "அண்ணனை" ஜெயிக்க வைப்போம்... முழங்கும் திருவாரூர் திமுக!
திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியே விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் திமுகவினர் உற்சாகமாக பணியாற்றுவதைக் காண முடிகிறது. எங்க "அண்ணனை" (கருணாநிதியை இப்படித்தான் செல்லமாக கூப்பிடுகிறார்கள் பல திமுகவினர்) 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம் என்றும் குஷியுடன் கூறுகிறார்கள்.
மண்ணின் மைந்தரான கருணாநிதி 2வது முறையாக தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் போட்டியிடுகிறார். 93 வயதான போதும் கூட பிரச்சாரத்தில் சற்றும் தொய்வின்றி பேசி வரும் கருணாநிதிதான், திருவாரூர் தேர்தல் களத்தில் நாயகனாக விளங்குகிறார்.
கடந்த முறை அதிமுகவும், சிபிஐயும், தேமுதிகவும் கூட்டணி போட்டு வந்தும் கூட கருணாநிதியை தோற்கடிக்க முடியவில்லை. இந்த முறை அவர்கள் பிரிந்த விட்டனர். எனவே கருணநாநிதி மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி என்றும் திமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
உங்கள் அண்ணன்
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் பிரச்சாரம் செய்தபோது என்னை உங்களது மூத்த சகோதரராக கருதி வாக்களியுங்கள் என்று கேட்டதைத் தொடர்ந்து பாசத்துடன் பலரும் அண்ணன் என்று கருணாநிதியை அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
மாபெரும் வெற்றியை நோக்கி
கருணாநிதி இந்த முறை மாபெரும் வெற்றியைப் பெறுவார் என்று திருவாரூர் திமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதே நம்பிக்கையுடன் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு லட்சம் வாக்கு வித்தியாசம்
இதுகுறித்து உள்ளூர் திமுக பிரமுகர் என்.சங்கர் கூறுகையில், இந்த முறை தலைவரின் வெற்றி வித்தியாசம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம். குறைந்தது 75,000 முதல் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் ஜெயிப்பார் என்றார்.
2011ல்
2011 தேர்தலில் கருணாநிதி இங்கு 50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை
என் சங்கர் மேலும் கூறுகையில், கடந்த முறை அதிமுக ஆதரவு அலையிலும் கூட கருணாநிதி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். இப்போது அதிமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அதிருப்தி அலை வீசுகிறது. எனவே மிகப் பெரிய வெற்றியை கருணாநிதி பெறுவது உறுதி என்றார்.
மண்ணின் மைந்தர்
ஆட்டோ டிரைவர் சீனு என்பவர் கூறுகையில் அவர் எங்களது மண்ணின் மைந்தர். அதற்காகவே அவருக்கு ஓட்டுப் போடுவேன் என்றார். விவசாயி ஆர். செல்வம் என்பவர் கூறுகையில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கருணாநிதி கூறியுள்ளார். அதை நான் வரவேற்கிறேன் என்றார்.
மொத்தத்தில் திருவாரூரில் கருணாநிதி வெற்றியைக் கொண்டாட இப்போதே திமுகவினர் தயாராகி விட்டனர்.