புதுச்சேரி: பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி பிரிவு
புதுச்சேரி: பாலியல் ரீதியாக பாதிப்புகளுக்கு உள்ளான பெண்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தனி பிரிவு (வார்டு) அமைக்கப்பட்டுள்ளது. அதனை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுவையில் பாலியல் ரீதியாக பாதிப்புகளுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க எல்லைப்பிள்ளை சாவடி 100 அடி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் 3-வது மாடியில் தனியாக ஒரு சிறப்பு சிகிச்சை பிரிவு (வார்டு) புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்டை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஓம்வீர் சிங், போலீஸ் சூப்பிரண்டுகள் பைரவசாமி, ரக்ஷனா சிங் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜோதி, மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி சுந்தர்ராஜ் ஆகியோர் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு விளக்கினார்கள்.
ஆண்களை அனுமதிக்க வேண்டாம்
அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் மருத்துவ அதிகாரிகளிடம், "இந்த வார்டுக்குள் ஆண்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பார்க்க ஆண்கள் யாரேனும் தனி வார்டுக்குள் நுழைய முயற்சி செய்தால் உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்"என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்வீர் சிங், புதுவையில் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த வார்டில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை மட்டுமின்றி சட்ட ஆலோசனை, கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைந்து வழங்கப்படும். போலீஸ் விசாரணையும் இங்கேயே நடத்தப்படும். இந்த வார்டினுள் பெண் போலீசார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் சீருடை அணியாமல் சாதாரண உடையில் வந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் ஓம்வீர் சிங்கூறினார்.