111 பேரிடம் ரூ74.39 கோடி வசூல் மோசடியில் பச்சமுத்துவுக்கும் தொடர்பிருப்பதால் கைது- போலீஸ் விளக்கம்
சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக 111 பேரிடம் ரூ74.39 கோடி வசூல் செய்து மோசடி செய்ததில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கும் தொடர்பிருப்பதால் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
பச்சமுத்து கைது குறித்து சென்னை போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
கடந்த 1.06.2016 அன்று சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயகாக் கட்சியைச் சேர்ந்த பாபு என்பவர் மூலமாக வடபழனி தோஷொ கார்டனில் இயங்கி வரும் வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் மதன் என்பவரை நேரில் சந்தித்து தன்னுடைய மகனுக்கு எம்.பி.பி.எஸ் சீட் பெறுவதற்கு ரூ53 லட்சம் கேபிடேஷன் தொகையாக கொடுத்ததாகவும் அதன் பின் எம்பிபிஎஸ் சேருவதற்கு நீட் தேர்வு அவசியமென அறிவிக்கப்பட்டதாகவும் அதனையொட்டி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்காமல் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாகிவிட்டதாகவும் தன்னை ஏமாற்றிய மதன், பாபு, கதிர் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவன நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு குற்ற எண்:143/206 ச/பி 406, 420, உ/இ/பி 34 இதசபடி 4.6.2016- அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
111 பேரிடம் ரூ74.39 கோடி வசூல் மோசடியில் பச்சமுத்துவுக்கும் தொடர்பிருப்பதால் கைது https://t.co/gXYUysGk5g pic.twitter.com/KJgZXk8S6b
— Oneindia Tamil (@thatsTamil) August 27, 2016
இதனிடையே 32.5.2016 அன்று வேந்தர் மூவீஸ் மதனின் தாயார் திருமதி தங்கம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தன் மகன் மதனை காணவில்லையென கொடுத்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் 1.6.2016 அன்று காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி இருவழக்குகளிலும் கூடுதல் துணை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். போலீஸ் விசாரணையில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை பெற்றுவதாக 111 நபர்களிடம் இருந்து ரூ74.39 கோடி பணத்தை வேந்தர் மூவீஸ் மதன் மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து பெற்று மோசடி செய்துள்ளனர் என தெரியவந்தது.
விசாரணையில் மதனுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் மருத்துவர் அணி செயலர் டாக்டர் பார்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டத் தலைவர் சண்முகம், திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாபு என்ற சீனிவாச பாபு மற்றும் ஏஜண்டாக செயல்பட்ட விஜய்பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் விசாரணையில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக கேபிடேஷன் பெறப்பட்டதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக குழுமத் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தரும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக குழுமத்தின் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தரும் வேந்தர் மூவீஸ் மதனும் சேர்ந்து காட்டாங்களத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சியில் உள்ள சென்னை மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அவர்களை அணுகிய புகார்தாரர்களிடம் இருந்து கேபிடேஷன் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவ சேர்க்கை அளிக்காமலும் புகார்தாரர்களிடம் இருந்து பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்ததன் பேரில் 25.8.2016 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜரான பச்சமுத்து (எ) பாரிவேந்தரை விசாரணையின் முடிவில் போலீசார் கைது செய்தனர். பச்சமுத்து(எ) பாரிவேந்தர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் பின்பு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையிலும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பின் சென்னை சைதாப்பேட்டை பெருநகர 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 9.9.2016 தேதி வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.