பதவியை காப்பற்றிக்கொள்ளவே பாடுபட்டார் பன்னீர் செல்வம் - ஸ்டாலின் தடாலடி
ஓபிஎஸ் முதல்வராக எதையும் செய்யவில்லை ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள், இளைஞர்களே காரணம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: முதல்வர் பதவியை பாதுகாக்கவே பன்னீர் செல்வம் பாடுபட்டார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள், இளைஞர்களே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
நமக்கு நாமே பாணியில் ஆர்.கே.நகரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீனவர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது அவர், மீனவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதிமுகவினர் 2 அணிகளாக பிரிந்து ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்ற அதிமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்றார்.
ஜல்லிக்கட்டு வெற்றி
முதல்வர் பொறுப்பில் ஓ.பி.எஸ் இருந்தபோது எந்த பிரச்சனையிலும் தலையிடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதற்கு மாணவர்கள், இளைஞர்களே காரணம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்றார்.
மாணவர்கள் மீது தடியடி
தடியடி நடத்தியபோது இளைஞர்கள் மீனவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மீனவர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்ததால் மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடலில் எண்ணெய் கலந்ததால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். தேர்தலில் அதிமுக கூறிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் பிரச்சரனைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.
விசாரணைக் கமிஷன்
திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றும் சசிகலா மட்டுமல்ல ஓ.பன்னீர் செல்வமும் விசாரிக்கப்பட வேண்டியவர்தான் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.