தர்மபுரி ஏழை மாணவனின் மருத்துவப் படிப்புக்கு மு.க.ஸ்டாலின் உதவி.. முழுச் செலவையும் ஏற்றார்!
திருச்சி: தர்மபுரியைச் சேர்ந்த ஏழை மாணவன் எம்.பி.பி.எஸ். படிப்பி்ல சேர முடியாமல் தவித்து வந்ததை அறிந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவனின் முழுப் படிப்புச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் முதல் கட்டமாக படிப்பில் சேருவதற்கான பணத்தையும் அவர் நேரில் கொடுத்தார்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் அஜீத் குமார். பிளஸ்டூவில் 1148 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தந்தை உடன் இல்லை. தாயார் சிறு வியாபாரம் செய்து வருகிறார். மிகவும் கஷ்டமான குடும்பச் சூழலிலும் கூட சிறந்த மாணவராக உருவெடுத்து பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்களுடன் திகழ்ந்த அஜீத் குமாருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர சீட் கிடைத்துள்ளது.
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் கூட அதில் சேர முடியாத நிலை. காரணம் வறுமை. இதுகுறித்து அறிந்த மு.க.ஸ்டாலின் அஜீத்குமாரை திருச்சிக்கு வரவழைத்தார். அவரிடம் அவரது படிப்புச் செலவு முழுவதை தான் ஏற்பதாக தெரிவித்தார். மேலும் முதல் கட்டமாக கல்லூரியில் சேருவதற்கான கட்டணத் தொகையையும் அளித்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், +2 தேர்வில் 1148 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் அஜீத்குமாருக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் குடும்பப் பொருளாதார சூழல் காரணமாக கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பரிதவித்த செய்தியை அறிந்தேன். உடனே மாணவர் அஜீத்குமாரை வரவழைத்து எனது முழு ஆதரவையும், அவரின் மருத்துவ கல்விச் செலவு அனைத்தையும் ஏற்பதாகவும் உறுதியளித்தேன். அவர் தன்னுடைய வாழ்வில் சிறந்த வெற்றிகளை பெற என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
அஜீத்குமாரும் அவரது தாயாரும் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.