கிரானைட் கொள்ளை: போலீஸ் பாதுகாப்போடு மதுரையை கலக்கப் போகும் சகாயம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நாளை விசாரணையைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு மதுரையில் தனி அலுவலகம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள, கிரானைட் உள்ளிட்ட கனிம குவாரிகளை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது தான், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கொள்ளை, வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது, அவரையே விசாரணை அதிகாரியாக, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளதால், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசியல் புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், 2011 மார்ச் முதல், 2012 மே வரை பணியாற்றினார். மதுரையில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மேலுார் பகுதியைச் சேர்ந்தவர்கள், கிரானைட் கற்களால் விவசாயம் பாதிக்கப்படுவதாக, அடிக்கடி புகார் கொடுத்து வந்தனர்.

ரூ.16000 கோடி கிரானைட் கொள்ளை

ரூ.16000 கோடி கிரானைட் கொள்ளை

முந்தைய மாவட்ட ஆட்சியர்களிடமும் இதுபோல புகார் கொடுத்தாலும், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தது, சகாயம் தான். இதற்காக குழு அமைத்து, கீழவளவு, கீழையூர் பகுதிகளில், மூன்று கிரானைட் நிறுவனங்களை ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில், மேலுார் பகுதியில், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து, அரசிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிக்கை கொடுத்தார். இந்த நிலையில் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

சகாயத்திற்குப் பின்னர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற, அன்சுல் மிஸ்ரா, இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டினார். முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்த நிறுவனங்களுக்கு சீல்வைக்கப்பட்டன. ஊழல் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அன்சுல் மிஸ்ராவும் மாற்றப்பட்டார். கைதானவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

டிராபிக் ராமசாமி மனு

டிராபிக் ராமசாமி மனு

இந்த சூழ்நிலையில், சென்னையைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். மாநிலம் முழுவதும், சட்ட விரோதமாக நடக்கும் கனிமங்கள் குவாரிகள் குறித்து ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ், அதிகாரி சகாயத்தை நியமிக்க வேண்டும்.சட்ட விரோதமாக கனிம குவாரிகள் நடத்துபவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசுக்கு அனுப்பிய மனுவை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரி இருந்தார்.

சகாயம் நியமனம்

சகாயம் நியமனம்

அவரது கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம் சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகலாம் என்று உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம் கண்டிப்பு

உயர்நீதிமன்றம் கண்டிப்பு

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், ஏற்கனவே கனிம வள முறைகேடு தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணையே போதுமானதென்றும், சகாயம் தலைமையிலான குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம், சகாயம் தலைமையிலான குழு அமைக்காததற்காக தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணை குழுவை 4 நாட்களுக்குள் நியமித்து உத்தரவிட வேண்டும் என்றும் அவருக்கு விசாரணை முடியும் வரை ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசு உத்தரவு

இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனும், பாதுகாப்பு அளிப்பது குறித்து மதுரை காவல்துறை ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

இதையடுத்து மதுரை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினாரை அழைத்து மதுரை ஆட்சியர் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், சகாயம் ஆய்வுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வது, தனி அலுவலகம், விரும்பும் அதிகாரிகளை அனுப்புவது, சட்ட உதவிகள், வாகன வசதிகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

84 குவாரிகளின் முறைகேடுகள்

84 குவாரிகளின் முறைகேடுகள்

175 கிரானைட் குவாரிகளில் நடந்த ஆய்வில் 84 குவாரிகளில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சகாயத்திடம் ஒப்படைக்கப்படும். பல வழக்குளில் குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தயார் செய்து வருகின்றனர். இதுகுறித்த விவரங்களும் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கூடுதல் பொறுப்பு

கூடுதல் பொறுப்பு

அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து சகாயம் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சகாயமும் அறிவியல் நகரத் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படாவிட்டாலும், கூடுதல் பொறுப்பாக விசாரணையை தொடங்கலாம். அரசு அனுமதி அளித்துவிட்டதால், விசாரணையை தொடங்குவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அவர் விரும்பும் அதிகாரிகளை குழுவில் நியமித்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதிய புகார்கள் குவியும்

புதிய புகார்கள் குவியும்

இதனிடையே கிரானைட் கொள்ளை வழக்கு சூடுபிடித்துள்ளதால் பொதுப்பணித் துறை கண்மாய், கால்வாய், நீர் ஓடைகள், அரசு புறம் போக்கு நிலங்களைக் காணவில்லை என்றும், குவாரி அதிபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்களை அளித்து வருகின்றனர்.

25000 ஏக்கர் நிலங்கள் பாழ்

25000 ஏக்கர் நிலங்கள் பாழ்

மேலூர் பகுதியில் விவசாயமே செய்ய முடியாமல் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலங்கள் தரிசாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். சகாயம் மீண்டும் தனது அதிரடி ஆய்வை துவக்க உள்ளதால் அப்போது ஏராளமான புகார் மனுக்கள் குவியும் நிலை உள்ளது. இதை விசாரித்தால் கிரானைட் பிரச்சினை மேலும் சிக்கலாகும் வாய்ப்புள்ளது என கிரானைட் குவாரி முறைகேட்டில் சிக்கியுள்ளவர்கள் கிலியில் உறைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+