பிண வாடை தாங்க முடியலை.. கலெக்டரிடம் ஓடி வந்த மாணவிகள்
நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை திரும்ப கொடுக்க சிவகிரி காந்தி நகரை சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்களின் இந்த வருகைக்கு காரணம், இவர்களின் வீடுகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டை உடனே மாற்ற வேண்டும் என்று மனு கொடுக்கத்தான்.
நெல்லை மாவட்டம் சிவகரி அருகே இடையன்குளம் காந்திநகர் பகுதி மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே அதிகாரிகளுடன் விவசாயிகளின் குறைகளை கேட்டு கொண்டிருந்தனர்.
இதனை தெரிந்து கொண்ட மாணவ, மாணவிகள் அவர்களது குடும்ப அட்டைகளை கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து கொணடு அங்குள்ள தரையில் வீசி எறிந்தனர். மேலும் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை அறிந்த கலெக்டர் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை முடித்து கொண்டு அவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.
அவர்கள் கொடுத்த மனுவில் சிவகரி அருகே காந்தி நகரில் சுமார் 70 குடும்பங்கள் உள்ளன. எங்கள் வீடுகளின் அருகே இடுகாடு உள்ளது. அங்கு பிணத்தை எரிப்பதால் தொடர்ந்து தூர்நாற்றம் வீசி வருகிறது. எங்களுக்கு ஏற்படும் பாதிப்பை கூறி ஏற்கனவே இங்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் எங்கள் பகுதியில் இறந்த ஒருவரை அடக்கம் செய்ய விடாமல் மற்றொரு பகுதியினர் தடுத்து வருகின்றனர். இது போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இடுகாட்டை மாற்றம் செய்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.