மெரினாவில் விதிகளை மீறி ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்டப்படுமா?
சென்னை: மெரினா கடற்கரையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சுற்றுசூழல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள், பாசனத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மெரினாவில் உலகத்தரம் வாய்ந்த நினைவு மண்டபம் அமைக்கப்படும். இதற்காக, உலக அளவில் கட்டிட வல்லுநர்களிடம் வரைபடம் கேட்டுள்ளோம். அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்து நினைவு மண்டபம் கட்டப்படும். வரைபடம் வந்தவுடன் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கும். அதேபோல, எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
மெரினா கடற்கரையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அப்பட்டமான விதிமீறல் ஆகும் என சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் கூறியுள்ளார்.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி சில வகையான கட்டிடங்களின் இடிபாடு மற்றும் புனரமைப்புகளை மட்டுமே சரிசெய்ய மட்டுமே அனுமதி உள்ளது. இந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
ஜெயலலிதா மறைந்தபோது மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ததே மாநகராட்சி விதிமீறல் ஆகும். இப்போது அதே இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அறிவித்திருப்பது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் விதிகளை மீறும் செயல் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் சம்மதித்தால் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்தை தனியாக அமைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.