என்னை கொல்வதற்கு முன்பு தமிழை கொன்று விட்டார்களே!: வருந்தும் தமிழிசை
சென்னை: என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் குறுஞ்செய்தி விடுத்தவர்கள், தமிழை இப்படி கொலை செய்து விட்டார்களே என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த எஸ் எம்.எஸ் தகவலில் , 'இந்த தேர்தலில் இருந்து நீ வாப்பிஸ் வாங்கலைன்னா உன் கார் மீது லாரி ஏற்றி உன்னை கொலை செய்துவிடுவேன் தமிழிசை... எங்க அம்மா வாழ்க' என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
வேட்புமனுவை திரும்பப் பெறாவிட்டால், லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்திரராஜன் கூறும்போது, ''வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் திரும்ப பெறும் நாள் இன்று. மாலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெறச் சொல்லி எனக்கு மிரட்டல் விட்டுள்ளார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
தமிழில் எழுதி இருக்கும் அவர்கள் தமிழை கொலை செய்து இருக்கிறார்கள் அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. இந்த மிரட்டல் எஸ்.எம்.எஸ்சில் அதில், ‘அம்மா வாழ்க' என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்காக ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை நான் சந்தேகிக்கவில்லை. திசை திருப்புவதற்காக கூட குறிப்பிட்டு இருக்கலாம்.
இப்படி குறுஞ்செய்திகள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டால் அவர்கள் வாக்களிக்க வருவது தடைபடும். எனவே அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.