எல்லோரும் மதுக் கடைகளை எதிர்க்கிறார்களே, மூட வேண்டியதுதானே.. தமிழிசை கேள்வி
சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை எல்லோரும் எதிர்ப்பதால் நாங்களும் எதிர்க்கிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. அப்படியானால், மதுக் கடைகளைக் கூடத்தான் எல்லோரும் மூடச் சொல்கிறார்கள். மூட வேண்டியதுதானே என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து விட்டது.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் உண்மையான ஷரத்து என்னவெனில் மத்திய அரசு முடிவு செய்தாலும் இறுதி முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் திருத்தம் தேவைப்பட்டால் முதல்வர்கள் கருத்தை கேட்டு திருத்தம் கொண்டுவரலாம் என்ற நல்ல எண்ணத்தில்தான் மத்திய அரசு இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
உண்மையிலேயே விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று நினைத்தால் நேரில் சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கலாம். என்னென்ன ஷரத்துக்கள் எதிராக உள்ளது? எந்த மாதிரி திருத்தம் தேவை? என்ற தங்கள் கருத்தை கூறியிருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் பொத்தாம் பொதுவாக புறக்கணித்து இருப்பது விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கிறார்கள். இதில் முடிவு வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
எல்லோரும் எதிர்ப்பதால் நாங்களும் எதிர்க்கிறோம் என்று தமிழக அரசு சொல்லுமேயானால் மதுக்கடைகளை எல்லோரும் எதிர்க்கிறார்கள். அதை மூட முடிவு செய்தார்களா? உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய அரசுடன் ஒத்துழைத்து நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.