ஓ.பி.எஸ் முதல்வரான பிறகு இன்று கூடுகிறது சட்டசபை: கருணாநிதி, விஜயகாந்த் பங்கேற்க வாய்ப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவி பறிபோனது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர் 29ம் தேதி பதவியேற்றார்.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று 2 மாதங்கள் ஆன பின்னரும் சட்டசபைக் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குதண்டனை விவகாரம், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்த விவகாரம், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு இரண்டு அணை கட்டப்போவதாக அறிவித்த விவகாரம் போன்றவற்றிற்கு தீர்வு காண தமிழக சட்டசபையை உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையை கூட்டாமல், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி கடைசியாக நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு 6 மாதங்களுக்குள் சபையைக் கூட்டினால் போதும் என்று அறிக்கை வெளியிட்டார்.
அறிக்கை வெளியிட்ட 2 நாளில் அதாவது, கடந்த 24ம் தேதி தமிழக சட்டசபை டிசம்பர் 4ம் தேதி கூடும் என்று சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்டசபைக் கூடுகிறது.
ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த பிறகு நடைபெறும் கூட்டம் என்பதாலும், புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் தனக்கு ஏற்றார் போல் இருக்கை வசதி அமைத்து கொடுக்கப்பட்டால் சட்டசபையில் பங்கேற்க தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இருக்கை வசதி செய்து கொடுக்கும் பட்சத்தில் அவர் சட்டசபையில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி முறிவுக்கு பின்னர் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் அமைச்சர்களை நாக்கு துருத்தி பேசியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர், சட்டசபைக் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் இருந்த விஜயகாந்த் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
விஜயகாந்தும் பங்கேற்க உள்ளதால் சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, ரேஷன் பருப்பு கொள்முதல் செய்ததில் ஊழல், சத்துணவுக்கு முட்டை வாங்கியதில் ஊழல், கனிமவள கொள்ளை பற்றி சகாயம் விசாரிக்க உத்தரவிட்டது உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பிரச்னையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், இன்று நடைபெறும் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.