தமிழகத்தின் பிரச்சினைகளை முழுமையாக தீர்ப்பார் ரஜினி- தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி
-எஸ் ஷங்கர்
நான் அரசியலுக்கு வந்தால்...
-இந்த ஒரு வாக்கியத்தைத்தான் ரஜினிகாந்த் பேசினார். கடந்த மூன்று மாதங்களாக இந்த வாக்கியத்தை வைத்து வளைத்து வளைத்து வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எதற்குமே ரஜினி இன்னும் பதில் சொல்லவில்லை.
ஆனால் அவற்றுக்கெல்லாம் ரஜினியின் குரலாய் ஒலித்துக் கொண்டிருப்பது காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனின் குரல்தான். யாரும் மறுத்துப் பேசிவிட முடியாத அளவுக்கு ஆணித்தரமான வாதங்களை ரஜினி சார்பாக அவர் முன் வைக்கிறார். ரஜினி அரசியல் ஒன்றுதான் தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றும் சக்தி.. அதற்கு மேலும் வலிமை சேர்க்க வாருங்கள் என மற்ற நேர்மையான அரசியலை விரும்பும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.
ரஜினி ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? அவரிடம் உள்ள திட்டங்கள் என்ன? தமிழகத்தின் நிரந்தரப் பிரச்சினைகளை அவர் எப்படித் தீர்க்கப் போகிறார் போன்றவற்றை தமிழகத்துக்கு தெளிவாகச் சொல்ல, தனது காந்திய மக்கள் இயக்கம் சார்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்துகிறார், திருச்சியில்.
ஆகஸ்ட் 20-ம் தேதி மாநாட்டுக்குச் செல்லும் கடைசி நேர ஆயத்தங்களில் இருந்த தமிழருவி மணியன், ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கேள்வி: இந்த மாநாட்டின் அவசியம், நோக்கம் என்ன?
பதில்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். 45 ஆண்டு காலம் தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிற இந்த தமிழக மக்களுக்கு தான் பட்ட நன்றிக் கடனை நேர்மையான அரசியல் மூலம் திருப்பிச் செலுத்த விழைகிறார். இந்த மக்கள் நன்றாக வாழவேண்டும். ஊழலற்ற, வெளிப்படைத்தன்மையான ஒரு நிர்வாகத்தைத் தர வேண்டும் என்பது அவர் ஆசை. அதற்கான சரியான திட்டங்களோடு வருகிறார் என்பதை உலகுக்கு அறிவிக்கவே நான் இந்த மாநாட்டை நடத்துகிறேன்.
கே: ஏன் ரஜினிகாந்தை ஆதரிக்கிறீர்கள்.. வேறு யாரும் இந்த மாதிரி கொள்கையை முன் வைக்கவில்லையா?
ப: நாளை நான் அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு யாராவது இருந்தால், இப்போதே போய்விடுங்கள், என்று தன் ரசிகர்களிடம் தெள்ளத் தெளிவாகச் சொன்ன ஒரே தலைவர் ரஜினிகாந்தாகத்தான் இருக்க முடியும். நன்றாக யோசித்துப் பாருங்கள்... வேறு யாராவது இந்தத் தலைமுறையில் அப்படிச் சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா? பொத்தாம் பொதுவாகச் சொல்வார்கள். அதை ஒருபோதும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதுதான் என்னை ரஜினிகாந்தை ஆதரிக்க வைத்தது. அடுத்து அவர் ஒரு அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அனைவரையும் பொதுவாகக் கருதும் நேர்மையான மனிதர். அவர் பார்க்காத பணம், புகழ் இல்லை. இனி அரசியலுக்கு வந்துதான் அவற்றைச் சம்பாதிக்கும் நிலையிலும் அவர் இல்லை. எனவே தமிழகத்தை ஆள அவர்தான் சரியானவர். அவரால் தமிழகம் மேன்மையான நிலையை அடைய இதுதான் சரியான தருணம்.
கே: ரஜினி ரசிகர்கள் சிலர் ஏற்கெனவே பல அரசியல் கட்சிகளில் இணைந்து பதவி, பண ருசி பார்த்தவர்கள். அவர்கள் ரஜினி எதிர்ப்பார்க்கும் அளவுக்கு நேர்மையாளர்களாய் மாறுவார்களா?
ப: ரஜினி விடுத்த எச்சரிக்கையே அந்த மாதிரி ரசிகர்களுக்காகத்தானே. அவர்கள் மாற்றப்படுவார்கள். மாறாவிட்டால் அந்த மாதிரி ஆட்களுக்கு இடமே இல்லை என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர் ஒரு யோகியைப் போல வாழ்ந்தவர். அதே நேரம் தன் அமைச்சரவைச் சகாக்களையும் நிர்வாக விஷயத்தில் அப்படியே இருக்க வைத்தவர். ரஜினியும் அந்த மாதிரி ஒரு நிர்வாகத்தைத் தரவே விரும்கிறார். அப்படிப்பட்ட நபர்களைத் கண்டெடுத்து நிர்வாகத்தில் அமர்த்துவார். அதிலெல்லாம் அவர் மிகவும் தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறார். எனக்கே அது வியப்பாகத்தான் உள்ளது.
கே: ஒரு கட்சி ஆரம்பிப்பது, கொடி அறிவிப்பது பெரிதல்ல... ஆனால் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது சாதாரண விஷயமில்லையே... ரஜினி எப்படி அதை குறுகிய காலத்தில் உருவாக்கப் போகிறார்?
ப: அதற்கான வேலைகளை அவர் எப்போதோ தொடங்கிவிட்டார் ரஜினி. அவர் செய்வதை எல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை உருவாக்குவது எத்தனை பெரிய விஷயம் என்பதை 25 ஆண்டுகள் அரசியலில் இருந்து வரும் ரஜினிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டுத்தான், சூசகமாக தன் அரசியல் வருகையைத் தெரிவித்துள்ளார்.
கே: ரஜினியின் அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அறிவிப்பு எவ்வளவு காலத்துக்குள் நடக்கும்?
ப: ஒரு கட்சியை ஆரம்பித்த பிறகு, தொண்டர்களை தொடர்ந்து பராமரிப்பது எவ்வளவு செலவு பிடிக்கும் விஷயம் என்பது தெரிந்த விஷயம். ஊழலை ஒழிக்க வரும் ஒரு தலைவர், தொண்டர்களுக்கு பணம் கொடுத்து பராமரிப்பது சரியாக இருக்குமா? இந்த அரசியல் மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க விரும்பாதவர் ரஜினி. அதே போல நாற்பதாண்டு காலத்துக்கு மேல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசியல் கடலில் கரைத்துவிட அவரும் தயாராக இல்லை. எனவே அனைத்து கட்டமைப்புகளையும் சரியாக உருவாக்கி வைத்துக் கொண்டு, தகுந்த நேரம் வரும்போது அவர் அனைத்தையும் அறிவிப்பார்.
தமிழகத்துப் பிரச்சினைகள் முழுமையாக ரஜினிக்குத் தெரியுமா? அவற்றைத் தீர்க்க ரஜினி வைத்துள்ள தீர்வுகள் என்ன?
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை ரஜினி தருவார் என எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?
மற்ற கட்சிகளைப் போல ரஜினி கட்சியிலும் குடும்பத்தினர் ஆதிக்கம் இருக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
அதிமுக, திமுகவிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ரஜினி பக்கம் வந்தால் ஏற்பீர்களா?
ரஜினி கட்சி - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதா?
- நாளை