மது விலக்காவது, ஒன்னாவது... தாலுகாவுக்கு 2 எலைட் கடைகளைத் திறக்க ரெடியாகும் டாஸ்மாக்!
சென்னை: தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் தலா 2 எலைட் மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் தீவிரப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மது விலையேற்றம் மட்டுமே அதன் விற்பனையை குறைத்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே மது விற்பனை குறைவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்து டாஸ்மாக்கின் இலக்கை எட்டுவதற்கான சரியான வழியை காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனையில் பல வகைகளில் முறைகேடு நடப்பது, அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. யாரால் முறைகேடு நடக்கிறதோ அவரிடம் இருந்து அந்தத் தொகையை வசூலிப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக்கின் உயர்தர மது விற்பனை நிலையமான "எலைட்" கடைகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எலைட் கடைகள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. பெரிய வர்த்தக மையங்களில் மட்டுமே அவை அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு மது வகைகள், இந்தியாவில் தயாரிக்கப்படும் உயர் ரக வகைகள் மட்டுமே இங்கு விற்கப்படும். இதை தாலுகா அளவில் கொண்டு வருவதற்கு தற்போது வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. விரைவாக இந்தக் கடைகளைத் திறப்பதற்காக, தகுந்த இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் டாஸ்மாக்கிற்கு எதிரான கோஷங்கள் வலுத்து வருகின்ற நிலையில் அரசின் இந்த முடிவானது பல்வேறு தரப்புகளிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.