வடமாநில தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்க 5 கூண்டுகள்... கூடலூரில் தேடுதல் வேட்டை
நீலகிரி: கூடலூர் அருகே, புலி தாக்கியதில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புலியை பிடிக்க 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேவர்சோலை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகு என்பவர் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், காலை வரை திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை, தேயிலை தோட்டம் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் மகுவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பகுதியில் புலி ஒன்று நடமாடி வருவதாகவும், ஏற்கனவே 10 மாடுகளை அது கொன்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், மகுவையும் புலியே அடித்து கொன்றுள்ளதாகவும் அவர்கள் சந்தேகம் எழுப்பினர். அதை தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய ஆய்வில், புலி தாக்கியதில் மகு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிரடிப்படை வீரர்களும், பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் தேவர்சோலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புலியை பிடிக்க ஆங்காங்கே கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.