வறுத்தெடுக்கும் வெயில்.. கரூர், சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சதமடித்த வெயில்
தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கரூரில் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை: தமிழகத்தில் அனல் வாட்டி எடுத்து வருகிறது. கரூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று 100 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கரூர் நகரில் அதிகபட்சமாக 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகத்தின் பல பகுதியில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் இன்று மக்களை வாட்டி வதைத்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தருமபுரி, சேலம், திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் 95 டிகிரி வெப்பம் பதிவானது. கடலூர், கன்னியாகுமரி, புதுச்சேரில் 93 டிகிரி வெப்பம் பதிவானது.
கோவையில் 98 டிகிரி, மதுரையில் 99 டிகிரி, நாகையில் 92 டிகிரி, பாளையங்கோட்டையில் 95 டிகிரி, தஞ்சாவூரில் 82 டிகிரி, தூத்துக்குடியில் 91 டிகிரி, கொடைக்கானலில் 66 டிகிரி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் குறைந்தபட்ட வெப்பநிலையாக ஊட்டியில் 53 டிகிரி வெப்பம் பதிவானது.
சுட்டெரிக்கும் வெயிலால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வெயிலோடு விட அனல் காற்றும் வீசுவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக சிரமப்பட்டனர். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே இப்படி வெயில் கொளுத்துவதால் இனி வரும் நாட்களில் எவ்வாறு இருக்கும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.