கோவில்களில் ஆபாச ஆடை கட்டுப்பாடும்... இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் இடமாற்றமும்!!
சென்னை: லெக்கின்ஸ், ஜீன்ஸ்... டி சர்ட், அரைகால் டிரவுசர்ஸ், துப்பட்டா இல்லாத டாப்ஸ் அணிந்து கொண்டு கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவினையடுத்து உடனடியாக அமல்படுத்தியது இந்து சமய அறநிலையத்துறை. 11-12-15 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை இந்துசமய அறநிலையத்துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோவில்களுக்கும் அனுப்பியது.
ஆடைக்கட்டுப்பாடு உடனடியாக அமல்படுத்தப்பட்டதை அடுத்து அனைத்து கோவில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் திடீரென தமிழக சுற்றுலா, கலை பண்பாடு, இந்து சமய அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளரான கே.ராஜாராமனை அந்த பதவியில் இருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த உத்தரவு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டதால் இந்த இடமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்த துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி முடிந்து தேர்தல் வரப்போகும் நேரத்தில் இந்த ஆடைக்கட்டுப்பாட்டை போட்டு ஏன் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று ஆள்பவர்கள் நினைத்திருக்க கூடும் என்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.
ஏற்கனவே கோவில்களில் ஆடு, கோழி பலியிடப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடைதான் 2006ம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நிலையில், 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இந்த ஆடைக்கட்டுப்பாடு சிக்கலை ஏற்படுத்தும் என்று நினைத்துதான் இதனை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு செல்லும் போது ஆடைக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் ஆலயத்திற்கு செல்லும் போது மட்டும் ஆடைக்கட்டுப்பாடு அவசியமில்லை என்று கூறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆந்திராவிலும், கேரளாவிலும் இந்த ஆடை கட்டுப்பாடு பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் அதை ஏற்றுக்கொண்டு பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு இறைவனை தரிசிக்கின்றனர். தமிழகத்திலும் தென்காசி, திருச்செந்தூர், உள்ளிட்ட பல கோவில்களில் தமிழக கோவில்களில் பாரம்பரிய உடை அணிந்து சென்றால்தான் அனுமதி உண்டு. இது சுற்றுலா செல்லும் பலருக்கும் தெரிந்த விசயம்தான்.
அரைக்கால் டிரவுசர், மினி ஸ்கர்ட்ஸ், மிடி, ஸ்லீவ்லெஸ்டாப்ஸ், குட்டையான ஜீன்ஸ் அணிந்து வரும் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஆண் பக்தர்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, உடலை மறைக்கும் துண்டு, பேன்ட், சட்டை, பெண் பக்தர்கள் சேலை, தாவணி, சுரிதார், துண்டு, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதான் தற்போது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கிறது. இதில் விவாதிக்கவோ எதிர்க்கவோ என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. திருப்பதிக்குப் போய் ஏழுமலையான தரிசிப்பவர்களோ, திருவனந்தபுரம் போய் பத்மநாபசாமியை கும்பிடுபவர்களோ இந்த கேள்வியை கேட்பதில்லை. இதில் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு நம் மக்களில் சிலர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே தவிர, முக்கிய கோவில்களுக்கு வெளிநாட்டு பயணிகள் வேஷ்டி, சேலை அணிந்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆடை கட்டுப்பாடு அமல்
கோயில்களில் கண்ணியக்குறைவாக, ஆபாசமாக ஆடை அணிந்து வரும் கலாச்சாரம் அதிகரித்ததையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, ‘கோயில்களுக்கு வருபவர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி, சட்டை, பைஜாமா, பேன்ட், பெண்களாக இருந்தால் தாவணி, சேலை, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரவேண்டும். இது 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது' என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 38 ஆயிரம் கோயில்களுக்கு பாரம்பரிய உடையணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு 2016ம் ஆண்டு புத்தாண்டு தினம் முதல் அமல்படுத்தப்பட்டது.
முதன்மைச் செயலாளர் இடமாற்றம்
தமிழக சுற்றுலா, கலை பண்பாடு, இந்து சமய அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக கே.ராஜாராமன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவரை அந்த பதவியில் இருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு குறித்த உத்தரவு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையங்கள் துறை ஆணையர் வீரசண்முகமணி, இந்த துறையின் செயலாளராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவேற்பும் எதிர்ப்பும்
ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த ஆடைக்கட்டுப்பாடு பக்தர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளான புத்தாண்டு தினத்தன்று, தடை விதிக்கப்பட்ட ஆடைகள் அணிந்து கோவிலுக்கு வந்தவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். அதன் பின், கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
வேட்டி, சேலையில் வெள்ளைக்காரர்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் மற்றும் மலைக்கோட்டை கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினருக்கு, அவர்களுடன் வரும், கைடுகள், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடு பற்றி எடுத்துக் கூறுகின்றனர். அதன்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தடை விதிக்கப்பட்ட ஜீன்ஸ், லெக்கிங்ஸ், சார்ட்ஸ், டி- சர்ட் போன்ற ஆடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து கோவிலுக்குள் செல்கின்றனர்.
பாரம்பரியத்திற்கு மரியாதை
ஸ்ரீரங்கத்துக்கு வந்த இத்தாலி, இஸ்ரேல் நாட்டினர், தமிழக பாரம்பரிய ஆடை அணிவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த கோவிலுக்கு வந்த போது, ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு மதிப்பளித்து, தமிழக பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலைகளை அணிந்து கொண்டோம். இவை, எங்களுக்கு வசதியாகவும், பெருமிதமாகவும் உள்ளது. எந்த நாட்டுக்கு சென்றாலும், அங்குள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர் வெளிநாட்டினர்.
பெண்கள் அமைப்பு மேல்முறையீடு:
உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவை எதிர்த்து, அறநிலையத்துறை செயலர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர் சரிகா தாக்கல் செய்த மனுவில், பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அவர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்படும். கோயில் நுழைவு அனுமதிச் சட்டத்தில்,' அந்தந்த கோயில் பழக்க, வழக்கப்படி ஆடைகள் அணிய வேண்டும்,' என உள்ளது. பல்வேறு கலாசாரத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வருவர். ஒரே மாதிரியான ஆடை அணிய கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இரு மனுக்களும், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
என்னதான் உங்க பிரச்சினை
சினிமாவிலோ, சீரியலிலோ கவர்ச்சியான ஆடை அணிந்தால் ரசிக்கலாம் அது யாரையும் பாதிக்காது. அதே நேரத்தில் மன அமைதிக்காவும், நிம்மதிக்காகவும் கோவிலுக்குப் போகும் போது உடலை வெளிக்காட்டும்படியான ஆடைகளை அணிந்து கொண்டுவருவது எந்த விதத்தில் நியாயம் என்றுதான் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
புடவை, வேட்டி அவசியம்
வெளியூர்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் பாரம்பரிய உடைகளை எடுத்துச்செல்லுங்கள். கோவில் வாசல்வரை எப்படி வேண்டுமானாலும் உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து செல்லுங்கள் கோவிலுக்குள் நுழையும் போது பாரம்பரிய உடைகளை அணிந்து கொள்ளுங்கள். சில கோவில்களின் வாசல்களிலேயே வேஷ்டி, துப்பட்டா போன்றவைகளை விற்பனையும் செய்கின்றனர்.
நீங்களே சொல்லுங்களேன்
திருப்பதி, குருவாயூரில் கோவில் வரிசையில் நிற்கும்போதே ஆண்களிடம் வேட்டிகளை கொடுத்து அணியச் சொல்கின்றனர் அப்போது யாரும் அணியமாட்டேன் என்றோ, ஏழுமலையானையோ, குருவாயூரப்பனையோ தரிசிக்கமாட்டோம் என்றோ சொல்வதில்லை. அப்புறம் ஏன் தமிழ்நாட்டு ஆலயங்களை ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதற்கு எதிர்க்கின்றனர் என்று தெரியவில்லை. நீங்களே சொல்லுங்களேன். ஆலயத்தில் நுழைய உயர்நீதிமன்றம் விதித்துள்ள ஆடைக்கட்டுப்பாடு அவசியமா இல்லையா?