நாளை தேவர் குருபூஜை: பசும்பொன்னில் மிக பலத்த பாதுகாப்பு
நெல்லை: பசும்பொன்னில் நாளை தேவர் குருபூஜை நடப்பதால் தென்மாவட்டங்களில் இருந்து 5000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவர் சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து அங்கு 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார், சிறப்பு படை, ஆயுதப்படை, பட்டாலியன்படை போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
நெல்லை டிஐஜி சுமித் சரண் உத்தரவின் பேரில் நெல்லை, குமரி, தூத்துக்குடியை சேர்ந்த 500 போலீசார் கமுதி, மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உளவுத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வஜ்ரா, கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனம், ரப்பர் குண்டு வீசும் வாகனங்களும் சென்றுள்ளன. தேவர் குருபூஜைக்கு சொந்த வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டுமே அனு்மதி தரப்பட்டுள்ளது.
வண்டியின் பதிவு எண், அதில் செல்பவர் பெயர், ஆகியவற்றை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவித்து அனுமதி சீட்டு வாங்க வேண்டும், வாடகை கார், வேன்களுக்கு அனுமதி இல்லை. இது போல் போலீசார் அறிவித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். மேலும் செல்லும் வழியில் கோஷமிடவோ, ஆர்ப்பாடடம் செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.