இப்படியும் நடந்தாலும் நடக்கலாம் பாஸ்...!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும், அடித்துக் கொள்ளும் திட்டிக் கொள்ளும் காட்சியைப் பார்த்து அடடா இப்படி அடிச்சுக்கறாங்களே, திட்டிக்கிறாங்களே என்று வேதனைப்படும் பொதுஜனமும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இதெல்லாம் சும்மா "லுலுலுலாயி" என்று பெரும்பாலான மக்களுக்கும் தெரியும். காரணம், கடந்த கால அரசியல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். அந்த வகையில் சட்டசபைத் தேர்தல் முடிந்து, லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழகத்தில் என்னவெல்லாம் நடக்கலாம் என நாம் எதிர்பார்க்கலாம்...?
வாங்க நிகழ்ச்சிக்குள்ள போவோம்...!
அதிமுக தலைமைக் கழகம்
செய்தியாளரிடம் அதிமுக மூத்த தலைவர், "மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களை சந்திக்க நாளை பிரதமர் மோடியின் தூதர் வருகிறார். அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அம்மாவைச் சந்திக்கவுள்ளார். பாமகவுடன் தொகுதிகள் குறித்துப் பேசி விட்டோம். அதேபோல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடும் கூட நிறைவடைந்து விட்டது. விரைவிலேயே கூட்டணி இறுதியாகி விடும்".
அண்ணா அறிவாலயத்தில்
திமுக செய்தித் தொடர்பாளர் செய்தியாளரிடம் கூறுகையில், கேப்டனிடம் பேசி முடித்து விட்டோம். தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டது. தொகுதிகள் எவை என்பது மட்டுமே பாக்கி உள்ளது. அதையும் நாளை அவர் தலைவர் கலைஞரைச் சந்தித்துப் பேசி முடிவு செய்யவுள்ளார். நாளையே கூட்டணி முடிவாகி விடும். காங்கிரஸ் எங்களது கூட்டணியை விட்டு விலகிச் சென்றது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை"
சத்தியமூர்த்தி பவனில்
காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்புத் தம்பி, என்னுடைய பாசத்துக்குரிய தம்பி ஜி.கே.வாசனும், நானும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுவோம். அதேபோல தம்பி சீமானும் எங்களுடன் இணைந்துள்ளார். இனி "நாங்களும் தமிழர்கள்"தான். குஷ்பு கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவரைப் பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இல்லை. நமீதா காங்கிரஸில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். பாரம்பரிய நடிகையான அவர் பாரம்பரியமான காங்கிரஸில் சேர விரும்புவது இயற்கைதானே.. நிச்சயம் இரு கரம் கூப்பி வரவேற்போம்".
இடதுசாரிகளின் தலைமை அலுவலகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தத்தமது ஆய்வுக் கூட்டங்களில் எடுத்த முடிவின்படி வருகிற மக்களவைத் தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்க முடிவு செய்துள்ளன. தொகுதிகள் எண்ணிக்கையை விட எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம் என்று தெரிவித்தார்.
கமலாலயம்.. பாஜக அலுவலகம்
தமிழக பாஜக தலைவர் சுப்பிரமணியம் சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, வரும் லோக்சபா தேர்தலை பார்வர்ட் பிளாக் (பழனியாண்டி) கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்க தீர்மானித்துள்ளோம். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு. நடிகர் கார்த்திக்கும் எங்களுடன் பேசி வருகிறார். அதேபோல மக்கள் எழுச்சிக் கழகம், கொங்கு மண்டல பாண்டிய மண்டல சோழ மண்டல முன்னேற்றக் கழகத்துடனும் முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது, முடிஞ்சுரும். சீக்கிரமே என்றார்.
கோயம்பேடு தேமுதிக அலுவலகம்
தேமுதிக முன்னணித் தலைவர் ஒருவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, வி.சி.சந்திரகுமார் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் கேப்டன் ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழு அதிமுக பொருளாளர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் விரைவில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும். விரைவில் நல்லபடியாக முடியும். அண்ணியார் அறிவுரைப்படி அனைத்தும் நல்லபடியாக போய்க் கொண்டுள்ளது"
தாயகம் - மதிமுக அலுவலகம்
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதிய உணவுக்குக் கூட செல்லாமல் தனித்துக் காத்திருந்தபோது செய்தியாளர்கள் அவரைச் சந்தித்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த "செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா.. கர்ணா.. வருவதை எதிர்கொள்ளடா" என்ற பாடலைக் கேட்ட செய்தியாளர்கள்.. வைகோவைச் சந்திக்காமலேயே எஸ் ஆகினர்.
சிரிக்காதீங்க பாஸ்.. நடந்தாலும் நடக்கலாம்...!