ஆடிட்டரை சந்தித்த மாஜி காங். மத்திய அமைச்சர்- அரசியல் அதிரடிக்குத் தயாராகும் பா.ஜ.க.
சென்னை: முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஒருவர், தமிழகத்தின் பிரபலமான ஆடிட்டர் ஒருவரை இன்று சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ' சி.பி.ஐ அதிகாரிகளின் அடுத்தடுத்த அதிரடிகளைத் தொடர்ந்தே அந்த முன்னாள் மாஜி, ஆடிட்டரிடம் சென்றிருக்கிறார். வெகுவிரைவில் முக்கியமான தகவல்கள் வெளியாகலாம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கி வருகிறது ஆடிட்டரின் அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு இன்று வந்த முன்னாள் மத்திய மாஜி, பட்டயக் கணக்காளருடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
இப்படி நேரடியாக அவர் அலுவலகம் செல்வார் என காங்கிரஸ் நிர்வாகிகளே எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க பிரமுகர் ஒருவர், " மத்திய அரசின் தமிழகப் பிரதிநிதியாகவே அந்த ஆடிட்டர் செயல்படுகிறார். தமிழக அமைச்சர்களைப் பற்றிக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தபோதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காரணம், ஆளும்கட்சியைக் கண்காணிக்கும் பொறுப்பில் அவர் இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் இருவருக்கு எதிராக சி.பி.ஐ நீதிமன்றம் வரையில் சென்று போராடினார் அந்த ஆடிட்டர். அந்த இரண்டு வழக்கிலும் உரிய ஆதாரங்கள் இல்லை என சி.பி.ஐ தனி நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்தார். பிரதான திராவிடக் கட்சியை அதிர வைத்த அந்த இரண்டு வழக்கின் தீர்ப்புகளின் மூலம் களங்கம் துடைக்கப்பட்டுவிட்டதாகக் கொண்டாடி வருகின்றனர் உடன்பிறப்புகள்.
இதே வரிசையில் தன்னையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் மாஜியின் வேண்டுகோள். மத்தியில் சுற்றுச்சூழல் பொறுப்பில் இருந்த அந்த முன்னாள் மாஜி, 'கட்சித் தலைமைக்குக் கப்பம் கட்டும் கார்ப்பரேட்டுகள் தனக்கும் தனியாக வரி கட்ட வேண்டும்' என நேரடியாகவே வேண்டுகோள் வைத்தார். இதனால் பல நிறுவனங்கள் தலைதெறிக்க ஓடிவிட்டன.
இதைப் பற்றி காங்கிரஸ் தலைமைக்கும் புகார் சென்றது. இதனையடுத்து, அமைச்சர் பொறுப்பில் இருந்தே அவர் நீக்கப்பட்டார். கட்சியின் முக்கியப் பிரமுகர் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளைக்கூறி கட்சியில் இருந்தும் வெளியேறினார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு காங்கிரஸ் முன்னாள் மாஜிக்களைத் தேடி தேடி ரெய்டு நடத்தி வருகிறது சி.பி.ஐ. இதில் அந்த மாஜியும் தப்பவில்லை.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இன்று வரையில் சில ரெய்டுகளையும் அவர் சந்தித்துவிட்டார். இந்த வழக்குகளில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். அதன் ஒருபகுதியாகவே இன்று அந்த ஆடிட்டரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். முன்னாள் முதல்வரின் பேத்தி என்ற வகையிலும் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையிலும், அவரை வரவேற்க பா.ஜ.க தயாராகவே இருக்கிறது. சி.பி.ஐ சோதனையின் தொடர்ச்சியாக, சில சமரசங்களுக்கு உடன்பட்டிருக்கிறார் மாஜி.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளை சிக்க வைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது. அரசியல் களத்தில் அடுத்து நடக்கப் போகும் காட்சிகளை வைத்து, மாஜியின் சந்திப்பை புரிந்து கொள்ளலாம்" என்றார் விரிவாக.