தனி மாவட்டம் ஆகிறதா கும்பகோணம்...? தமிழக அரசு பரிசீலனை
தஞ்சாவூர்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழக அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருவதால் விரைவில் அது குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தையும் சேர்த்து மொத்தம் 37 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 38-வது மாவட்டமாக கும்பகோணம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்கள் தொகை மற்றும் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூரில் இருந்து பிரிக்கப்பட்டு கும்பகோணம் தனி மாவட்டம் ஆக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணம்
கோவில் நகரம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை, தனி மாவட்டமாக்க கோரி பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் 38-வது மாவட்டமாக கும்பகோணம் விரைவில் அறிவிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லா வசதிகளும்
கும்பகோணத்தில் இல்லாத வசதிகளே இல்லை எனக் கூறும் அளவுக்கு ஊர் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்துள்ளது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, டெல்டா மாவட்டங்களுக்கான பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம், நீதிமன்றம், மருத்துவமனைகள், என கடந்த 10 ஆண்டுகளில் கும்பகோணம் நகரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.
எந்தெந்த தொகுதிகள்
கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் பாபநாசம், திருவிடைமருதூர்,கும்பகோணம், என மூன்று சட்டமன்ற தொகுதிகள் அதில் அடங்கும் எனத் தெரிகிறது. இதனிடையே புதிய மாவட்டத்துக்கான வருவாய் நிர்வாக அமைப்பை கண்டறியும் பணிகளும் ஒரு புறம் நடைபெறுகிறது.
விரைவில் நல்ல செய்தி
கும்பகோணத்தை தனி மாவட்டமாக எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும், இது தொடர்பான பரிசீலனை 90% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் கும்பகோணம் மக்களுக்கு விரைவில் நல்ல செய்தி காத்திருக்கிறது.