ரயில்வே ஊழியர் தற்கொலை… போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்… நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
சிவகாசி: போலீசாரின் தொடர் தொந்தரவு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான ரயில்வே ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ரயில்களை நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில்வே காலனியை சேர்ந்தவர் வெள்ளைத்துரை (53). இவரது மனைவி வெள்ளைத்தாய். 3 மகன்கள் உள்ளனர். ரயில்வே டிராலிமேனாக வேலை பார்த்த வெள்ளைத்துரை, உடல்நிலை சரியில்லாததால் ரயில் நிலைய பொருட்களை பாதுகாக்கும் பிரிவிற்கு காவலாளியாக மாற்றப்பட்டார்.
இந்நிலையில் ரயில்வேக்கு சொந்தமான பொருட்கள் திருடுபோனது. இதுதொடர்பாக வெள்ளைத்துரை மீது ரயில்வே பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். அவரை நேரில் ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் கூறியிருந்தார். ஆனால், வெள்ளைத்துரை ஆஜராகவில்லை.
இதனால் ரயில்வே போலீசார் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று ஆஜராகுமாறு கூறி மிரட்டியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த வெள்ளைத்துரை, ரயில்வே பொருட்கள் வைக்கும் அறையில் நேற்று விஷம் குடித்து இறந்து கிடந்தார். அவரது சட்டை பையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
தற்கொலை கடிதம்
அதில் ராஜபாளையம் குருசாமிராஜா மகள் என்னை போனில் மிரட்டினார். கடவுள் சாட்சியாக நான் தவறு எதுவும் செய்யவில்லை. போலீசார் என் மீது பொய்புகார் பதிவுசெய்துள்ளனர். இதனால் நான் மரணத்தை தேர்ந்தெடுக்கிறேன். எனது மனைவி, குழந்தைகளை கடவுள் காப்பாற்றட்டும் என எழுதப்பட்டிருந்தது. ரயில்வே போலீசாரின் தொடர் டார்ச்சரால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரயில்களை நிறுத்தி போராட்டம்:
இதையடுத்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுவதிலும் எஸ்ஆர்எம்யூ ஊழியர்கள் நேற்று இரவு ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்னலை இயக்கவோ, டிக்கெட் கொடுக்கவோ ஆள் இல்லாததால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, வெளியூர் செல்ல வேண்டிய பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஊழியர்கள் தர்ணா
மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயிலில் எஸ்ஆர்எம்யூ கோட்டச்செயலாளர் ரபீக் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சுனில்குமார் கார்க் வந்து, இந்தப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, இரவு 9.10 மணிக்கு ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் அதன்பிறகு சென்னை கிளம்பிச் சென்றது. மதுரைக்கு வரவேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிநேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தது.
பொய் வழக்குப் பதிவு
ஊழியர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அபாண்டமாக பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தற்போது ஒரு ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவகாசியில் உள்ள மேலும் 2 ஊழியர்கள் மீது பொய் வழக்கு உள்ளது. ரயில்வே போலீசாரின் அத்துமீறலை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். வெள்ளைத்துரையை மிரட்டியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தென்மண்டல ரயில்வே ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.
ரயில்கள் தாமதம்
ரயில்வே ஊழியர்களின் போராட்டம் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரவேண்டிய ரயில்கள் காலையில் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் அலுவலகம் செல்லவேண்டியவர்கள் பாதிப்பிற்கு ஆளாகினர்.