ஆசைஆசையாய் முதல் குழந்தையை சுமந்த உஷா... கண்முன்னே உயிரிழந்த காதல் மனைவியை பார்த்து தவிக்கும் கணவர்!
ஆசைஆசையாய் முதல் குழந்தையை சுமந்த காதல் மனைவி உஷா கண்முன்னே உயிரிழந்ததற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று அவரின் கணவர் ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: ஆசைஆசையாய் முதல் குழந்தையை சுமந்த காதல் மனைவி உஷா கண்முன்னே உயிரிழந்ததற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று அவரின் கணவர் ராஜா தெரிவித்துள்ளார். காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சாலையில் நேற்று நடைபெற்ற சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அத்துமீறி நடந்து கொண்ட காவல் ஆய்வாளரால் 3 மாத கர்ப்பிணிப் பெண் உஷா அநியாயமாக உயிரிழந்துள்ளார்.
தன் கண்முன்னே துடிதுடித்து இறந்த காதல் மனைவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று ராஜா கேட்டுக் கொண்டுள்ளார். திருச்சி சாலையில் நேற்று என்ன நடந்தது என்பதை அவர் விளக்கியுள்ளார். டோல் கேட் அருகே காவல் ஆய்வாளர் வாகனத்தை நிறுத்தச் சொன்னார். ஆனால் அங்கே நிறுத்த இடமில்லை பின்னால் ஒரு வாகனம் வந்து கொண்டிருந்து. என்னுடைய வாகனத்திலும் லக்கேஜ் இருந்தது.
சட்டையை பிடித்து கேள்வி கேட்ட காவலர்
இதனால் சற்று தூரம் தள்ளி வந்து நின்றேன். இதற்கு காமராஜ் அங்கேயே நிற்க முடியாதா என்று என்னுடைய சட்டையை பிடித்து இழுத்து கேட்டார். அங்கு நிறுத்தமுடியவில்லை என்ற சொன்னேன், பின்னர் வண்டியில் இருந்து எடுத்த சாவியை மீண்டும் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
அபராதமும் விதிக்கவில்லை
முதலில் நிறுத்திய இடத்திலேயே காசு கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன், ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் போட்டிருந்தாலும் கட்டி இருப்பேனே. ஆனால் துரத்தி வந்து வாகனத்தை உதைத்துத் தள்ளி என்னுடைய மனைவியை கொன்றுவிட்டான்.
கலைந்த முதல் குழந்தை கனவு
என்னுடைய மனைவி தஞ்சாவூரில் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். நான் திருச்சியில் பணியாற்றினேன், நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். தினசரி பணிக்கு போய் வர முடியாது என்பதால் திருச்சியிலேயே செயல்படும் அந்த பள்ளியின் கிளையில் பணியாற்றினார். ஏற்கனவே ஒரு குழந்தை கலைந்துவிட்டதால், இந்தக் குழந்தையையாவது நல்லபடியாக பெற்றெடுக்கலாம் என்று ஆசைஆசையாய் காத்திருந்தோம்.
கொலை வழக்கு பதிய வேண்டும்
காவல் ஆய்வாளர் மீது நிச்சயம் கொலை வழக்கு போட வேண்டும். என்னுடைய மனைவியை உதைத்து தள்ளிவிட்டு பழிவாங்கி விட்டான் என்று கதறி அழும் ராஜாவை மருத்துவமனையில் கூடி இருக்கும் பொதுமக்கள் தேற்றி வருகின்றனர்.