தமிழர் நலன் காக்கவே அதிமுகவை ஆதரிக்கிறோம்...: தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்
சேலம்: நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யும் என்று சேலத்தில் நடந்த மாநாட்டில் நிறுவன தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஞாயிறன்று மாலை சேலம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் காவேரி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் காமராஜ் வரவேற்றார். இணை பொதுச்செயலாளர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
ராஜபக்சேவை தண்டிக்க
கால் நூற்றாண்டாக ஒரு கட்சியில் இருந்து பின்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அப்போது, இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தூக்கி நிறுத்தி தோள் கொடுத்துள்ளீர்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சே சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைமன்ற கூட்டத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்தக்கோரி இந்திய அரசு தீர்மானம் இயற்ற வேண்டும்.
தமிழ் சமூகத்திற்காக மாநாடு
தேர்தலுக்காக இந்த மாநாட்டை நடத்த வில்லை. அப்படி நடத்தினால் சேலம் மாநகரம் தாங்காது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் தமிழ் சமூகத்திற்காக தான் இந்த மாநாடு நடத்துகிறேன். பேரறிவாளன், சாந்தன், முருகன் 3 பேரின் விடுதலை குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
7 பேர் விடுதலை
இதையடுத்து, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும், நானும் தமிழக டு ஜெயலலிதாவை சந்தித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா 7 பேரை விடுதலை செய்து அறிவித்தார். மேலும், மத்திய அரசை எதிர்த்து, துணிந்து நின்று 3 நாட்களில் விடுதலை என்பதையும் அறிவித்தார். இது இந்திய வரலாற்றிலேயே சிறப்பு வாய்ந்ததாகும்.
40 தொகுதிகளிலும் வெற்றி
வருகிற நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். சிலர் கூட்டணிக்காக இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல்வருக்கு வாழ்த்து
வேல்முருகன் சீட்டுக்காகவோ, நோட்டுக்காகவோ அ.தி.மு.க.வுக்கு செல்லவில்லை. நாங்கள் நம்பி வந்துள்ளோம், எங்களை கைவிட்டு விடக்கூடாது. 66 வது பிறந்தநாள் காணும் ஜெயலலிதாவுக்கு இந்த மாநாட்டில் திரண்டுள்ள லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் நான் உங்களுக்கு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை கொலை செய்ய பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் பாட்சாக்கள் பலிக்காது. நான் உயிருக்கு பயந்தவன் கிடையாது.
ஜெயலலிதா பிரதமராக
லோக்சபா தேர்தலில் நம்முடைய உழைப்பு அ.தி.மு.க.வின் அடிமட்ட கட்சி தொண்டன் உள்பட தலைமை வரை தெரிய வேண்டும். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று 3-வது அணிக்கு ஜெயலலிதா தலைமையேற்று பிரதமராக வேண்டும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாம் 2 இடங்களில் வெற்றி பெறுவோம்.
பொது வாக்கெடுப்பு
தமிழ் ஈழம் உருவாக அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கையாகும். இதை நிறைவேற்றினால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பாராட்டுவார்கள்.
புரட்சித்தலைவி
பா.ம.கவில் இருந்த போதோ அல்லது தனிக்கட்சி தொடங்கிய போதோ நான் உங்களை புரட்சித்தலைவி என்று அழைக்கவில்லை. இன்றைக்கு மத்திய அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டக்கூடிய அம்மா அவர்களே நீங்கள்தான் உண்மையான புரச்சித்தலைவி என்று கூறினார்.
டாஸ்மாக்கை மூடுங்க
டாஸ்மாக்கினை படிப்படியாக மூடுங்கள். அது மட்டும் நடந்துவிட்டால் மூன்றரை கோடி தமிழர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் அதிமுகவிற்கே விழும், நாற்பதும் அதிமுக வசமாகும் என்று பேச்சை முடித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் வேல்முருகன்.