மனைவியுடன் கள்ளத் தொடர்பு... கண்டித்த கூலி தொழிலாளி.. காரில் கடத்தி எரிக்க முயன்ற இருவர்
தூத்துக்குடி: மனைவி உடனான கள்ள தொடர்பை கண்டித்த கூலி தொழிலாளியை கடத்தி எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி தொழிலாளியை காரில் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடம்பன்குளத்தை சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. தற்போது தூத்துககுடி முத்தையாபுரம் மில்லர்புரத்தில் வசி்த்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி. இவர் சேலை, துணிகள் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு ஓரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மாலையில் தூத்துக்குடி சவேரியர்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த முருகனை அதே பகுதியை சேர்ந்த சிலர் சராமரியாக அடித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றனர்.
காருக்குள் வைத்து முருகனை அடித்தவாறே நெல்லையை அடுத்த சீவலப்பேரிக்கு கடத்தி சென்றனர். அங்குள்ள செக்போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் இருந்த போலீசார் காரை மடக்கினர். காருக்குள் காயத்துடன் இருந்த முருகனை போலீசார் மீட்டனர். காரை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது அதில் பழைய சேலைகளும், பெட்ரோலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முருகனை கடத்தி வந்தவர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுக நயினார், துரைராஜ் என்பது தெரிய வநத்து. ஆறுமுக நயினார் மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி கன நீர் ஆலையில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் முருகனின் மனைவி சித்ரா தேவிக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதை அறிந்த முருகன் இருவரையும் கண்டித்தார். இதனால் அவரை கடத்தி வந்து தீர்த்து கட்ட திட்டம் தீட்டினார் ஆறுமுக நயினார். தனக்கு உதவியாக உறவினரான துரைராஜை சேர்த்து கொண்டு சவேரியர்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்த முருகனை கடத்தியுள்ளனர். போலீசார் வாகன சோதனையில் இல்லாமல் இருந்திருந்தால் முருகன் கொல்லப்பட்டிருப்பார். இதையடுத்து நயினாரையும், துரைராஜையும் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசாரிடம் சீவலப்பேரி போலீசார் ஓப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.