ரயில் மோதி பெண், சிறுமி பலி: அய்யா வைகுண்டசாமி விழாவுக்கு சென்று திரும்பிய போது விபத்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில் பெண் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
நேற்று முந்தினம் சாமிதோப்பில் நடைபெற்ற அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழாவில் கலந்து கொள்வதற்காக ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது 45), அய்யப்பனின் மனைவி சுபீதா என்ற சுதா (35), அவருடைய மகன் புவனேஷ் (9), மகள் அனுஷா (8) உள்பட 7 பேர் சென்றிருந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அன்று பிற்பகலில் அங்கிருந்து ரயில்வே தண்டவாள பாதை வழியாக ஈத்தாமொழிக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள் வடக்கு தாமரைக்குளம் ரெயில்வே ஆற்றுப்பாலத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச்சென்ற கொல்லம் மெமு ரெயில் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தப்பிச்செல்ல முயற்சி செய்த அவர்களில் ஐந்து பேர் ஆற்றுக்குள் குதித்து விட பஞ்சவர்ணம் மற்றும் அனுஷா ஆகியோர் மட்டும் ரயிலில் சிக்கி விட்டனர். இதில் பரிதாபமாக அவர்கள் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியானவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேற்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தில் பலியான சிறுமி அனுஷாவுடன் அவளது தாயார் சுதாவும் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். ஆனால் அவரால் மகன் புவனேஷை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது.