2 நாட்களில் 16 இடங்களில் 56 பவுன் கொள்ளை – விமானத்தில் வந்து அபேஸ் செய்த "லூதியானா" திருடர்கள்!
சேலம்: சேலத்தில் கடந்த இரண்டு நாட்களில் கிட்டதட்ட 16க்கும் மேற்பட்ட இடங்களில் 56 பவுன் நகைகளை லூதியானாவில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்த இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களில், சேலம் நகரில் உள்ள பல இடங்களில் நடந்து போன பெண்களிடம் கருப்பு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாட்களில் மட்டும் 16 இடங்களில் நடந்த நகை பறிப்பு சம்பவங்களில் மொத்தம் 56 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நகை பறிப்பில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் , நான்கு ஆட்களும் சம்மந்தப்படிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
அவர்களை சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணை மேற்கொண்டதில், இவர்களுடன் மேலும் இருவர் சேர்ந்து தான் சேலத்தில் 16 இடங்களில் தங்க நகைகள் பறித்து தெரியவந்தது.
இவர்களுடன் மேலும் இரண்டு பேர் பெங்களூரிலிருந்து தனியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் முன்கூட்டியே பெங்களூர் வழியாக விமானம் மூலமாக பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவிற்கு சென்று விட்டதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.
கைதான அமர்குமார் சர்மா உத்தரபிரதேசமாநிலத்தை சேர்ந்தவர், இன்னொருவர் பெயர் ரவிக்குமார் பஞ்சாப் மாநிலம், லூதியானா நகரை சேர்ந்தவர்.