'உயர பறந்தாலும் பருந்தாக முடியாது..' கொலையான தலித் வாலிபர் சங்கர் தந்தைக்கு மிரட்டல் கடிதம்
திருப்பூர்: ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் தந்தைக்கு அலாவுதீன் என்பவர் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குமரலிங்கத்தை சேர்ந்த வேலுசாமி என்பவருடைய மகன் சங்கர் (22) பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். அவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கவுசல்யா (19) என்ற வேறு ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்கு, கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க நின்றபோது சங்கர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதில் காயம் அடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை தொடர்பாக, தலைமறைவாக இருந்த 5 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கவுசல்யாவின் தந்தை பழனியை சேர்ந்த சின்னசாமி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்தநிலையில் சங்கரின் தந்தை வேலுசாமியின் பெயரில் அவருடைய வீட்டுக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அனுப்புனர் முகவரியில் எஸ்.அலாவுதீன், ஒன்னிப்பாளையம், காரமடை, கோவை மாவட்டம் என்று இருந்தது.
அந்த கடிதத்தின் தொடக்கத்திலேயே, ஜாதி பெயரை குறிப்பிட்டு வசவு ஆரம்பிக்கிறது. "உன்ற மகன் உயிர் போனது போனது தான். 2வது மகனையாவது ஒழுங்கா வளர்த்து சாதியில் பெண் கட்டி வை. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. இதெல்லாம் அமெரிக்கா, லண்டன், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த காதல் ஒத்துவரும். இது இந்தியாவுக்கு ஒத்துவராது. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.
உனது மகன்களை 5 வது வகுப்போ, 8 வது வகுப்பு வரையோ மட்டும் படிக்க வைத்து, செருப்பு தைக்கும் தொழிலை செய்திருக்க வேண்டும். கல்லூரியில் படிக்க வைப்பதெல்லாம் தவறு" என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
வேலுசாமி அந்த கடிதத்தை குமரலிங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அனுப்புனர் முகவரி மற்றும் தபால் முத்திரை பதிவான நாள் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த கடிதம் எங்கிருந்து வந்தது? அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரின் தம்பி விக்னேஷ்வரன்(19) கூறுகையில், எனது அண்ணி சிகிச்சை முடிந்த பின்னர் எங்களுடன் தான் சேர்ந்து வாழ இருக்கிறார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது இன்னும் பிரச்னைகள் வரும் என்று பயமாக உள்ளது. போலீசார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.